குமாரி அம்ருதாபார்த்தசாரதி அரங்கேற்றம்
கடந்த மாதம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி குமாரி அம்ருதா பார்த்தசாரதியின் அரங்கேற்றம் கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோ வில் உள்ள Cubberley Theater அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

குமாரி அம்ருதா 29 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வரும் 'ஸ்ரீ குருக்ருபா நாட்டியப் பள்ளியின் மாணவி ஆவார். Monta Vista உயர்நிலைப் பள்ளியில் 9வது கிரேடு படித்து வரும் இவர் படிப்பிலும் இதர துறைகளிலும் (விளையாட்டு, கணிதம்) சிறந்து விளங்கும் மாணவி ஆவார்.

திருமதி விஷால் ரமணியிடம் எட்டு வருடங்களாக பரதம் பயிலும் குமாரி அம்ருதாவின் அரங்கேற்றம் அருமையாக அமைந்து மனதுக்கு நிறைவைத் தந்தது. எல்லாம் வல்ல கடவுளையும் குருவையும் வணங்கி மற்ற எல்லோருடைய ஆசிகளை வேண்டி முதல் நிகழ்ச்சியாக 'புஷ்பாஞ்சலி' கம்பீரமாக ஆரம்பித்தது கம்பீர நாட்டையில்.

நளினமான அபிநயனங்களுடன் ஆரம்ப மான கணேச வந்தனத்தை மூன்றாவதாகத் தொடர்ந்து கமாஸ்ராக, ஆதிதாளம் கொண்ட ஸ்வரஜதி. சுத்தமான தாளம் பிசகாத அழுத்தமான ஜதிகளை அவையோர் ஆனந்தமாக ரசித்தனர்.

அடுத்து வந்த வர்ணம் மாயாமாளவ கெளளையில் மிஸ்ரஜதி அடவுகளுடன் தசாவதாரக் காட்சிகளை சித்தரிப்பதாக அமைந்திருந்தது. கஜேந்திர மோட்சம், திருப்பதி ஸ்ரீனிவாச புராணம் முதலியவை இடம் பெற்ற வர்ணத்தில் சபரிமோட்சம். இராமவதாரக் காட்சியில் சபரி ஸ்ரீ இராமனிடம் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியையும் அன்பையும் வெளிப்பட்டு அருமையான பாவங்களுடன் ஆடிக் காட்டினார் குமாரி அம்ருதா. அடுத்து ஆடின தேவி மீனாட்சியைப் பற்றிய 'தேவி நீயே துணை' என்ற கீரவாணி ராகப் பாடலிலும் கவி துளசிதாசரின் 'துமகிசவத' ஹிந்தி பஜனிலும் முகபாவங்களும் அபிநயங்களும் அழகாகச் சித்தரிக்கப்பட்டன.

ரூபக தாளத்தில் அமைந்த தேஷ் ராகத் தில்லானா துரிதமாகவும், தாளம் பிசகாமலும் விறுவிறுப்பாக அமைந்தது. இறுதியாக அரங்கேற்ற நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்த ஆண்டாள் பிராட்டியின் தெய்வீகக் கனவைச் சித்தரிக்கும் வாரணமாயிரம் பாடலுக்கு பொருத்தமான ஆடை அணிகளுடன் ஆண்டாளாகவே மாறி பரமபுருஷனான அரங்கனை அடையக் காணும் ஆண்டாளின் அபரிமிதான பக்தியையும் காதலையும் ஆழத்துடன் சித்தரித்தார் அம்ருதா.

இறுதியாக அப்பிள்ளை அருளிய ஆழ்வார்வாழித் திருநாமப் பாடலான ''திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாய் வாழியே'' என்ற பொருத்தமாக அமைந்த மங்களத்துடன் நிறைவுற்றது. வெற்றிகரமான இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் அனுபவமுதிர்ச்சியுடன் கூடிய குரு திருமதி. விஷால் ரமணியின் அயராத உழைப்பு பாரட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

குமாரி அம்ருதா தாளம் பிசகாமல் ஜதிகளை விறுவிறுப்பாக ஆடும் போது புன்னகை மாறாத முகத்துடன் வெவ்வேறு முகபாவங்களுடன் அபிநயங்களை அழகாக சித்தரித்தார். திரு. மதுரை ஆர்.முரளிதரனின் நட்டு வாங்கம் மிக மிக எடுப்பாக அமைந்தது.

இசைக்கலைஞர் திரு. முரளிபார்த்தசாரதி அவர்கள் பதங்களை கம்பீரமான குரலில் இனிமையாக பாடி மெருகூட்டினார். இனிமையாக இணைந்து வாசித்த வயலின் கலைஞர் என்.வீரமணி அவர்களுக்கு அருமையாக மிருதங்கம் வாசித்து ஓட்டத்தை சோபிக்கச் செய்த மிருதங்க கலைஞர் எம்.தனஞ்செழியன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

மிகச் சிறப்பாக அமைந்த குமாரி அம்ருதாவின் அரங்கேற்ற நிகழ்ச்சியை அளித்தப் பெற்றோர் திரு. பார்த்தசாரதி, திருமதி ஜெயா பார்த்தசாரதி இருவரும் பெருமைக்குரியவர்கள்.

நல்லதொரு நாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்த வளைகுடா பகுதி மக்கள் ஆனந்தமும் பெருமையும் அடைந்தனர்.

திருமதி சரோஜா நாராயணன்

© TamilOnline.com