MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
நவம்பர் 21, 2009 அன்று மாகா தமிழ்ச்சங்கம் (டொராண்டோ, கனடா) கலைமணி என்ற புனைபெயரில் 'தில்லானா மோகனாம்பாள்' உட்படப் பல நாவல்களையும் சிறுகதைகளைகயும் எழுதியவரும், வில்லுப்பாட்டு வித்தகரும் கவிஞருமான கொத்தமங்கலம் சுப்பு அவர்களிம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைவர் ரகுராமன் வரவேற்புரை கூறி, பேச்சாளர்களை அறிமுகப் படுத்தினார். கலைமணியின் நூற்றாண்டு 2010-ல் வரவிருக்கும் நிலையில் மாகா தமிழ்ச் சங்கம் முன்னோடியாக 2009லேயே விழா எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

முதலில் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பன்முகங்கள் என்ற தலைப்பில் கவிஞர் பேரா. பசுபதி பேசினார்: அக்டோபர் 8, 1910 அன்று கன்னாரியேந்தல் என்ற சிற்றூரில் பிறந்த சுப்பிரமணியன், கொத்தமங்கலத்தில் நிலைபெற்று வாழ்ந்தமையால் கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார். இளம்வயதில் ஒரு மரக்கிடங்கில் கணக்காளராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னாளில் கவிஞர், பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்று பன்முக அறிஞராக அறியப்பட்டார். மண்ணின் வாசனை மிளிரப் பாடல்கள் எழுதுவது இவருடைய தனிச்சிறப்பு. இக்காரணத்தால் இவரை மண்ணாங்கட்டிக் கவிஞர் என்பாரும் உண்டு. அவர் மனத்தாலும் மற்றோருக்கு இடர் நினையாத காந்தீயவாதி தில்லானா மோகனாம்பாள், பந்தநல்லூர் பாமா, பொன்னிவனத்துப் பூங்குயில், ராவ்பஹதூர் சிங்காரம் முதலிய புதினங்கள்; 150 சிறுகதைகள், மஞ்சுவிரட்டு என்னும் கவிதைத் தொகுப்பு, 100க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவை போன்று பல அரிய தகவல்களை கூறினார் பேரா. பசுபதி

அடுத்துப் பேசிய திருமதி அலமேலு மணி, கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மகளாவார். அவர் பேச்சின் சாரம் பின் வருமாறு: ஆறடிக்கு மேலான ஆகிருதி, சந்தனப் பொட்டுடன் ஜவ்வாதும் சேர்ந்து மணக்க ரேக்ளா வண்டியில் சவாரி. பகல் முழுதும் வேலை செய்த களைப்பிருந்தாலும் மாலையில் உற்சாகமாக நாடகம் பார்க்க 20 மைல் பாடிக்கொண்டே செல்வார். செல்லப்ப செட்டியாரின் மரக்கடையில் கணக்கராக பணிபுரிந்த சமயம் பர்மா தேக்கு, பெல்ஜியம் கண்ணாடி முதலிய சரக்குகளின் அருமை பெருமைகளை தனது பேச்சுத் திறத்தால் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லி வியாபாரத்தைப் பெருக்கும் ஒரு 'சேல்ஸ்மேனாகவும்', சிரித்துப் பேசியே கடை பாக்கிகளை வசூல் செய்யும் திறனும் கொண்ட 'மானேஜராகவும்' விளங்கினார். வத்திராயிருப்பு ஸ்ரீனிவாசன் என்பவருடன் எற்பட்ட நட்பில் ஜெமினி ஸ்டூடியோவில் பணியில் அமர்ந்தார். படிப்படியாக முன்னேறி, வாசன் அவர்களின் வலக்கை எனவும், ஜெமினி நிறுவனத்தின் தூண் எனவும் போற்றும்படியான நிலையை அடைந்தார். ஜெமினியில் இருந்த நாட்களில் பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதியும், நடித்தும், வசனங்கள் எழுதியும் இருக்கிறார்.

சீனப்போர் நடந்து கொண்டிருந்த நாட்களில் நிதி சேகரிக்கப் பெண்களிடம் உள்ள நகை முதலான உயர்மதிப்புள்ள பொருட்களை நன்கொடையாக அரசு பெற்றுக் கொண்டிருந்தது. அவ்வமயம் தந்தையாரின் அனுமதி பெறாமலேயே தங்கச் சங்கிலியையும், வளையல்களையும் கழற்றித் தந்துவிட்டார் அலமேலு. பின்னர் வீட்டுக்கு வந்ததும் மெதுவாக தந்தையிடம் அதைச் சொல்ல, அவர், “ஆத்தாக்குட்டி, நீ ஏன் கைவிரல் மோதிரத்தைக் கொடுக்க மறந்துவிட்டாய்?" என்று கேட்ட நெகிழவைக்கும் நிகழ்ச்சியைத் திருமதி மணி அவர்கள் கூறியபோது அவர் கண்களில் மட்டுமல்ல, அவையோர் கண்களிலும் நீர்ப்பெருக்கு.

இரா. சௌந்தர்,
கனடா

© TamilOnline.com