தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
செப்டம்பர் 19, 2009 அன்று தென் ஃப்ளோரிடா தமிழ் சங்கம் சி.எஸ். ஐங்கரன் மற்றும் அனிதா கிருஷ்ணா குழுவினர் பங்கேற்ற 'தேனிசை மழை' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடனும், நவராத்திரி துவக்கம் என்பதால் தெய்வ வழிபாட்டுடனும் விழா துவங்கியது. 'மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்' என்றும் 'காலம் கனிந்தது, கதவுகள் திறந்தது' என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருந்தன. அடுத்து தேசிய விருது பெற்ற சங்கராபரணப் பாடலைப் பாடியபோது, பலகுரல் மன்னரான ஐங்கரனுக்கு எஸ்.பி.பி.யின் குரல்தான் சொந்தக் குரலோ என்று சொல்லும் அளவுக்குக் குரல் பொருத்தம். தொடர்ந்து வந்த பழைய, புதிய படல்களின் கலக்கலான கதம்பம் வந்திருந்தோரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. 'முகுந்தா முகுந்தா', 'நெஞ்சே நெஞ்சே', 'தேன் தேன் தேன்' ஆகியவை சிறப்பாக இருந்தன.

புதிய பாடல்களில் ஐங்கரன் குரலில் எஸ்.பி.பியும், ஜேசுதாஸும், உதித் நாராயணனும் மேடையில் தோன்றினார்கள் என்றால் பழைய 'ஓஹோ எந்தன் பேபி' பாடலில் ஏ.எம். ராஜவும், 'பெண்ணொன்று கண்டேன்' பாடலில் டி.எம்.எஸ்ஸும், பி.பி. ஸ்ரீனிவாசும் போட்டி போட்டனர். அனிதா அவர்களின் குரல் அற்புதத்தைச் சொல்லத் தனிக் கட்டுரை வேண்டும். உள்ளூர்ப் பாடகர்களான டாக்டர். வெங்கடாசலம், சாந்தி விஸ்வநாதன், செல்வி. கானவியா ஆகியோரை நிகழ்ச்சியில் ஈடுபடுத்தியது வரவேற்கத் தக்கது.

டாக்டர். அப்பு ரத்தினவேலு,
தலைவர், தென் பூவகத் தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com