பாட்டியின் ஏக்கம்
சிறுகதைப் போட்டித் தேர்வு

"வீட்டை அப்படியே இந்த அம்மாவிடம் விட்டுவிட்டு ஓட வேண்டியிருக்கிறது. இனி நான் வரும்வரை இவர்களுடைய சாம்ராஜ்யம்தான். இந்த வயதிலும் பாதாம், பிஸ்தா என்று கொட்டிக் கொண்டு எவ்வளவு தேஜஸூடன் இருக்கிறார்கள்" என்று தனக்குக் கேட்க வேண்டும் என்றே அதிக சத்தமாகச் சலித்துக் கொண்டு செல்லும் தன் மருமகளைப் பார்த்துச் சிரித்தாள் ராஜி மாமி. மருமகளின் குற்றச்சாட்டு ஒருவகையில் சரிதான் என்று நினைத்தாள். ஆனால் உண்மை வேறு.

எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. "கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடியது அன்பிலாப் பெண்டிருடன் வாழ்வது. அதனினும் கொடியது அவர் கையால் உண்பதுவே" என்று கேட்டவுடன் மாமிக்குப் பழைய ஞாபகம் வந்தது. "ஆம், இந்தப் பாட்டு என் வாழ்வில் பலித்து விட்டது" என்று பழைய நினைப்பில் மூழ்கிவிட்டாள்.

##Caption##சுமார் 75 வருடங்களுக்கு முன் கோவிலின் பின்புறம் கட்டியிருக்கும் யானையின் அருகில் உட்கார்ந்து கொண்டு அது செய்யும் விஷமங்களைப் பார்த்து மகிழ்ந்திருந்த காலம். இரண்டாம் உலகப் போர்க்காலம். சிவன் கோவில் சந்நிதித் தெருவில் தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் அக்கா, அண்ணன், அப்பா, அம்மா, தம்பி இவர்களுடன் ஐந்தாவது மகளாக அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ராஜி வாழ்ந்து வந்தாள். அப்பா ஒரு ஏழைத் தொழிலாளி. கோவில் சாமான்களைப் பழுது பார்ப்பது போன்ற எடுபிடி ஆள். அப்பொழுது ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்புதான், கைப்பொருள் எல்லாவற்றையும் இழந்து தடுமாறி, சந்நிதித் தெருவில் குடியேறினர். அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களைப் பார்த்து, "எப்படி வாழ்ந்த குடும்பம். அருணாசலத்தின் கதி யாருக்கும் வரக் கூடாது" என்று சொல்வதன் பொருள் குழந்தையான ராஜிக்கு விளங்கவில்லை.

காலையில் கோவிலுக்குப் போய் தேவாரம் பாடும் ஓதுவாருடன் பிரகாரம் சுற்றிய பின்பு கிடைக்கும் சுண்டல், பொங்கல்தான் காலை உணவு. தெருக்குழாயின் தண்ணீர்தான் காலை காப்பி. எதுவும் தனக்குக் கிடைக்கவில்லையே என்று நினைக்கக் கூடத் தெரியாத உள்ளம் ராஜிக்கு.

ஒருநாள், தெருவில் சாக்கடைக்கு மிக அருகில் நீளவாக்கில் பெரிய பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தான் பாண்டியன். அவனைப் பார்த்து, "பாண்டி, ஏன் பள்ளம் தோண்டுகிறாய்?" என்று கேட்ட ராஜிக்குக் கிடைத்த பதில், "இதுவா, இது நம்மை எல்லாம் போட்டுப் புதைக்க." அதிர்ந்து போன சிறுமி விர் என்று கோவிலின் முன் கல்லாப் பெட்டிக்கு முன் உட்கார்ந்து கணக்கே எழுதாத (அங்கு யாரும் வருவதில்லை பணம் போடுவதற்கு) கணக்குப் பிள்ளையிடம், "மாமா, இந்தக் குழி எதற்கு" என்று கேட்க, அவர், "வெள்ளைக்காரர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் சண்டை. ஜெர்மன்காரன் வெள்ளைக்காரன் ஊரான தூத்துக்குடியில் குண்டு போட்டு விடுவான். அப்படி குண்டு போட்டு விட்டால் நாம் இந்தக் குழிக்குள் பதுங்கி உயிர் பிழைக்கலாம்" என்றார். ராஜிக்கு இதெல்லாம் சுத்தமாகப் புரியவேயில்லை.

சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் காலையில் அம்மா அவர்கள் எல்லோருடைய கையிலும் ஒரு பையைக் கொடுத்து கலெக்டர் ஆபிஸில் வரிசையாக நிற்கும் கூட்டத்துடன் அவர்களை நிறுத்தி விட்டு, தான் வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வேகமாகச் சென்று விட்டாள். 10 பேர்தான் நின்றார்கள். ராஜிக்கு புதிராக இருந்தது. தனது அக்காவிடம் ஏன் நிற்கிறோம் என்று கேட்க, அவள், "ராஜீ, கடையில் கூட அரிசி கிடையாது. ஆகவே கலெக்டர் தலைக்கு அரைக்கால்படி அரிசி கொடுக்கிறார். அதனை நாம் இந்தப் பையில் வாங்கிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்றாள். கலெக்டர் வந்தார். அரிசியும் கிடைத்தது. தங்கள் பையுடன் வீடு வந்தார்கள். அம்மா, குழந்தைகளை கட்டித் தழுவி மகிழ்ந்தாள். அந்தச் சந்தோஷ முகத்தைப் பார்த்த ராஜி, "அம்மா, எவ்வளவு அழகாக இருக்கிறாள்" என்று நினைத்தாள்.

கஷ்டத்தில் பல நாள்கள் கழிந்தன. ஒருநாள் அதிகாலையில் அம்மா ராஜியையும், தம்பியையும் இழுத்துக் கொண்டு போய் ஒரு மாட்டு வண்டியில் துணிமூட்டைகளுக்கு இடையில் திணித்தாள். வண்டியை ஓட்டச் சொல்லிவிட்டு சந்நிதியை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வண்டிக்குப் பின்னால் நடந்தாள். வண்டியின் முன்னால் அப்பா, அண்ணன், அக்கா எல்லோரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். எல்லோரும் எங்கோ போகிறோம் என்ற நினைப்பில் ராஜி கண்ணயர்ந்து விட்டாள்.

திடீரென ஒரு சத்தம். அப்பா ராஜியையும், தம்பியையும் தூக்கிக் கொண்டு தண்ணீரில் நடந்து சென்று மறுகரையில் இறக்கி விட்டார். பின் வண்டிக்காரனிடம் சென்று ஏதோ பேசினார். அம்மா, அண்ணன், அக்கா இருவரையும் இரண்டு கைகளில் பிடித்துக் கொண்டு தண்ணீரில் நடந்து வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அப்பா கூப்பிட அம்மாவும் போய் விட்டாள்.

ராஜி, அக்காவிடம் ஏன், எங்கே எதற்காக வந்தோம் என்று கேட்க, அவளும் விளக்கமாக பதில் சொன்னாள். "ராஜீ, அப்பா அன்று "சங்கு ஊதினதும் குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். மறுபடி சங்கு ஊதினதும் வெளியே வந்துவிட வேண்டும்" என்று சொன்னாரில்லையா. ஆனால் நேற்று தப்பட்டைக்காரன் தெருதெருவாக வந்து "எல்லோரும் ஊரைவிட்டு 10 மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். இன்னும் ரெண்டு நாட்களில் குண்டு போட்டு விடுவார்கள். இங்கிருந்தால் சாக வேண்டியதுதான்" என்று சொன்னான். அதனால் அப்பா, நம்மை ஆத்தூரில் உள்ள தாத்தா வீட்டில் விட்டுவிட்டு சண்டை முடிந்ததும் நம்மைத் தூத்துக்குடிக்குக் கூட்டி வந்து விடுவார் என்று சொன்னதும் ராஜிக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாம் தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஆர்வம்தான். ஆனால் அது ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை. அம்மா, பதைபதைக்க ஓடிவந்து, "இருட்டிக் கொண்டு வருகிறது. வண்டிச் சக்கரம் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. சக்கரம் வெளியேறினால் தான் நாம் ஊர் போக முடியும். பகவானே, குழந்தைகளைக் காப்பாற்று..." என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். ராஜியால் அந்தக் காட்சியைப் பார்க்க முடியவில்லை. எத்தனை கதாகாலட்சேபங்கள் கேட்டிருக்கிறாள். பகவானைக் கூப்பிட்டவுடன் அவர் வந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவியது ஞாபகம் வரவே, தன் முழுபலத்தையும் வரவழைத்துக் கொண்டு, " முருகா, என் அப்பாவிற்கு பலத்தைக் கொடு. சக்கரத்தை வெளியே கொண்டு வா" என்று சத்தமாக வேண்டிக் கொண்டாள்.

##Caption## அப்போது எதிர்க்கரையில் தலையில் முண்டாசுடன் ஆஜானுபாகுவாக ஒருவர் வந்து, "சாமீ என்ன வண்டிச்சக்கரம் மாட்டிக்கிச்சா, ஏய், வண்டிய ஓட்டப்பா, நான் தூக்கி விடுகிறேன்" என்று சொல்லி உதவ, வண்டியின் சக்கரம் மேலேற்றப்பட்டு வண்டி தண்ணீருக்குள் அசைந்து அசைந்து வந்தது. கரை வந்து சேர்ந்த அப்பா, அந்த மனிதரின் கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறியதைப் பார்த்த ராஜிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா சொன்ன "திருச்செந்தூர் முருகன்தான் வந்து நமக்கு உதவி பண்ணினான்" என்ற குரல் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஒரு வழியாகத் தாத்தா வீட்டை அடைந்தார்கள். சற்று வசதியான வீடு என்பதால் நல்ல சாப்பாட்டுடன் அன்றைய இரவு கடந்தது.

தாத்தா வீடு மாந்தோப்பு, தென்னந்தோப்புடன் கூடிய பெரிய வீடு. காலையில் எழுந்தவுடன் ராஜிகேட்ட முதல் சத்தம் யானையின் மணியோசைதான். துள்ளிக் குதித்து திண்ணைக்கு வந்தால் ஒரு பாகன் யானையைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்று கொண்டிருந்தான். ராஜிக்கு மிகவும் மகிழ்ச்சி. கிழக்கே தெரு முனையில் வீரபத்திர ஸ்வாமி கோவில். இது தாத்தாவின் குலதெய்வ சன்னிதானம். பக்கத்திலுள்ள குளத்திற்குச் சென்று, தன் மாமாவின் உதவியுடன் தாமரை மலர்களைக் கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தாள் ராஜி.

சாப்பிட்டு முடித்த பின் தோட்டத்திற்குச் சென்று உதிர்ந்து கிடக்கும் மாங்காய்களைப் பொறுக்கிக் கொண்டு வருமாறு பாட்டி சொன்னாள். ராஜியும் உடன் புறப்பட்டாள். அங்கிருந்து பார்த்தபோது பாகன், யானைக்குத் தீனிபோட்டு, இடத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அங்கு சென்று எதிர் சுவரில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். இது பல நாள்கள் தொடர்ந்தது.

ஒருநாள் அந்த வீட்டின் சிறுமி வந்து ராஜியை தன் அம்மா அழைப்பதாகக் கூறினாள். ராஜியும் சென்றாள். அந்த வீடு மிகவும் நவீனமானதாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த சாமான்கள், பெண்களின் ஆடைகள் என அனைத்தும் புதிதாக இருந்தது அவளுக்கு. ராஜியை அன்போடு அழைத்த அந்த அம்மாள் ஒரு கிண்ணத்தில் மாவும் பழமும் தந்தாள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ராஜி மாவைச் சாப்பிட்டுவிட்டு, தன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள். அக்காவிடம், "அவர்கள் வீட்டில் எல்லோரும் எதை எதையோ சாப்பிடுகிறார்கள். எனக்கு மட்டும் மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுத் தந்தனர். அரிசி மாவையும், சர்க்கரையையும் சேர்த்து மண் சட்டியில் போட்டு வறுத்ததாம்" என்றாள். மேலும், "என்ன ருசி தெரியுமா, அவர்கள் ஆடை எல்லாம் நம்மைப் போல இல்லை. உடம்பு முழுவதும் நகைகள் வேறு. நம்மைப் போல் இல்லாமல் எல்லாமே வேறாக இருக்கிறதே, ஏன்?" என்று கேட்டாள்.

அதற்கு அக்கா, "ராஜி, அவர்கள் மரைக்காயர் என்ற முஸ்லிம்கள். நிரம்ப செல்வம் உள்ளவர்கள். முஸ்லிம்கள் என்பதால் பெண்கள் வெளியே வருவதில்லை. அவர்கள் சாப்பாடும் வேறு. அசைவம். அதை நமக்குக் கொடுக்கக் கூடாது என்றுதான் உனக்கு மாவையும், பழத்தையும் கொடுத்துள்ளனர். அவர்கள் மிகவும் நல்லவர்கள். தாத்தாவும் அந்த வீட்டு மரைக்காயரும் உயிர் நண்பர்கள்" என்றாள். நிறைய பணம் வேண்டும், வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பிஞ்சு மனதிலேயே ராஜிக்கு உருவானது.

இன்று காலமாறுபாட்டை நினைத்து பெருமைப்பட்டாள் ராஜி. இங்கு, அமெரிக்காவில் எத்தனை இனம், எத்தனை மதம்? ஆனாலும் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவில் வாழ்கிறோம். இது அமெரிக்காவின் தனிச்சிறப்பு. காலவேகத்தின் மாற்றம் என்று அமைதி கொண்டாள்.

மணி 2 அடித்தது. ஐயோ பேரன், பேத்தி வந்துவிடுவார்களே என்ற எண்ணம் வந்தவுடன் இவ்வுலகிற்கு ராஜி வந்தாள். எத்தனையோ கஷ்டங்களைச் சமாளித்த தனக்கு அப்போதிருந்த தைரியம் இன்று எங்கோ போய் விட்டதே. மருமகள் சொல்லும் சுடுசொல்லைத் தாங்கும் இதயத்தை தனக்குக் கொடுக்குமாறு பகவானிடம் வேண்டிக் கொண்டு எழுந்தாள் ராஜி.

காலமாற்றம் மொட்டாகி, மலராகி காயாகி, கனியாகி உதிர்கிறது. குழந்தையாக இருந்து, சிறுமியாகி, மங்கையாகி, மனைவியாகி, தாயாகி, பாட்டியாகி போக வேண்டிய காலம் வந்து விட்டதை ராஜி உணர்ந்தாள்.

யார் என்ன சொன்னால் என்ன? பிறர் தங்கள் மனப் போராட்டங்களை நம்மிடம் தெரிவித்தால் நாம் திரும்ப அவர்கள் மனம் புண்படப் பேசமாட்டோம். சிறுவயது, வேலைப் பளு, குடும்பப் பொறுப்பு. இவற்றின் சுமையால் உந்தப்படும் மருமகளுக்கு, தனது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. தனது கடமைகளைச் செய்வதற்குத் தயாரானாள் ராஜி.

ராசி,
சான் ஹோசே

© TamilOnline.com