வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 23, 2009 அன்று சிகாகோவிலுள்ள காலேஜ் ஆப் துபேஜ் மக்ஆனிஞ்ச் ஆர்ட்ஸ் சென்டரில் குமாரி வித்யா விஸ்வபாரதியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. லதாங்கியின் கம்பீரத்துடன் ஆனைமுகத்தோனை வணங்கி நிகழ்ச்சி தொடங்கியது. நர்த்தன கணபதியை வித்யா சுவாரஸ்யமாகச் சித்திரித்தார். அதுவும் கம்பீர நாட்டை ராகத்தில். அடுத்து தொடர்ந்தது வர்ணம், பைரவியில் 'வேலனை வரச்சொல்லடி' முதல் தீர்கால தீர்மானத்திலிருந்து சரணம்வரை ஒவ்வொரு ஜதிக்கோர்வைக்கும் பலத்த கைதட்டல். வள்ளி திருமணத்தில் முருகப் பெருமானின் திருவிளையாடலை அழகாகச் சித்திரித்தார். இந்த இளம் வயதில் பொருத்தமான, அழகான முக பாவங்களுடன் ஆடியது மிகச் சிறப்பு. காம்போஜியில் பராசக்தி நடனமாடி மகிஷனை வென்ற காட்சியை எளிதாகக் கையாண்டார் வித்யா.

அடுத்தடுத்து வந்த பதமும், ஜாவளியும் பாராட்டுக்குரியவை. ஆஞ்சநேயர் பதம் வராளியில். அருமையாக ஆஞ்சநேயரின் ராம பக்தியும், பறந்து சென்று சீதா பிராட்டியாரை சந்தித்து மோதிரம் கொடுப்பதும், ராவணன்முன் தனது வாலால் இலங்கையை எரிப்பதிலும், விஸ்வரூபம் எடுப்பதிலும் குமாரி வித்யா அவையோரை "ஆஹா" போடவைத்தார். ஹிந்தோளத்தில் தில்லானாவை விமரிசையாகக் கையாண்டார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 'மைத்ரீம் பஜத' பாடலை உலக அமைதிக்காக அன்னை சூரியா சாஸ்திரி இனிமையாக இசைக்க, மகள் வித்யா ஆழமான கருத்தை அபிநயித்தார். மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது. வித்யா 4 1/2 வருடங்களுக்குள் இவ்வளவு கற்றது, குரு ஹேமா ராஜகோபாலனின் திறமைக்குச் சான்று.

சுசீலா ராமஸ்வாமி (குரலிசை), சங்கரன் (புல்லாங்குழல்), விஜய ராகவன் (மிருதங்கம்), ஸ்ரீகாந்த் வெங்கடராமன் (வயலின்), கோமதி சுவாமிநாதன் (வீணை) ஆகியோரின் பின்னணியில் வித்யா பரிமளித்தார் என்பதில் சந்தேகமில்லை.

ஜயந்தி ரமணன்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com