மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 6, 2009 அன்று ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கில் குரு ராதிகா சங்கரின் மாணவி மேனகா சங்கரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. 'அகஜானன பத்மார்க்கம்' எனும் கணேச வந்தனம், தோடய மங்களம், மதுரை முரளிதரன் இயற்றிய புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்த முருகன், நடராஜர், கணேசர் கவுத்துவத்தில் சிவனைச் சித்தரித்த விதம் சிறப்பு. 'ஓம் நமசிவாய' என்னுமிடத்தில் காட்டிய உருக்கம் கச்சிதம். தொடர்ந்து டாக்டர் பத்மா சுப்ரமண்யம் இயற்றிய ஜதிஸ்வரத்தில் பரத ந்ருத்யத்தில் சில கரண அசைவுகளுடன் சாகித்யம் ஏதும் இன்றி ஸ்வரம், ஜதி எனச் சிறப்பாக ஆடி அவையினரின் கரகோஷத்தைப் பெற்றார் மேனகா.

மதுரை முரளிதரன் இயற்றிய ஆனந்த பைரவி ராக வர்ணத்தில் ராமாயணத்தில் சில நிகழ்ச்சிகளை - தசமுகனை வென்றது, தவமுனியின் யாகம் காத்து தாடகையை வதம் செய்தது, மாயமான் மாரீசனைத் தேடிச் சென்றது - என அனைத்தும் தத்ரூபமாக இருந்தன. பரதனின் பாத பூஜை பரவசத்தைத் தந்தது.

'மேரே தோ கிரிதர' எனும் மீரா பஜன் பாடலில் கிருஷ்ண விக்ரகத்தின் கீழ் அசையாமல் உட்கார்ந்த மீரா, புல்லாங்குழல் இசை கேட்டு எழுந்து கண்ணனின் பெருமைகளைப் பாடி, ஆடி ப்ரேம பக்தியை வெளிப்படுத்துவதாகச் சித்திரித்த விதம் அவையோரின் பாராட்டைப் பெற்றது. தொடர்ந்த 'ஆடிக் கொண்டார்' பாடலுக்கு தில்லை அம்பல நடராஜனின் நடன காட்சியைச் சித்திரித்ததும் வெகு அருமை.

தொடர்ந்து கான்காடில் கோவில் கொண்ட முருகனைப் பற்றி சீதா துரைராஜ் இயற்றிய பாடலுக்கு ஆறெழுத்தின் பெருமை, சூரன் வதம், மயில் ஆட்டம், காவடி ஆட்டம் என அனைத்தையும் மேனகா வேகத்துடன் ஆடிக் காட்டியவிதம் சிறப்பாக இருந்தது.

சென்னை சுதேவ வாரியர் (குரலிசை), தொலைக்காட்சி புகழ் கே. சுதாமன் (மிருதங்கம்), மைசூர் சந்தன் குமார் (புல்லாங்குழல்) எனப் பக்கவாத்தியங்களும் நிகழ்ச்சியின் சிறப்புக்கு உறுதுணையாக இருந்தன.

குரு ராதிகா சங்கர் தாயாகவும், குருவாகவும் இருந்து பரத நாட்டியக் கலையை சிறப்புற மகள் மேனகாவுக்கு போதித்திருப்பது பாராட்டத்தக்கது.

சீதா துரைராஜ்,
சான்ஹோசே, கலிபோர்னியா

© TamilOnline.com