கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை
கிளீவ்லாந்து (ஒஹையோ) நகரத்தில் இருபத்தியோராவது தியாகராஜ ஆராதனை ஈஸ்டர் விடுமுறை சமயத்தில் ஒரு வார காலம் நடைபெற்றது.

இந்த ஆண்டு சுதா ரகுநாதன், ரஞ்சனி, காயத்ரி, டாக்டர் ரமணி (புல்லாங்குழல்), சஞ்சய் சுப்பிரமணியன், உமையாள்புரம் சிவராமன் (மிருதங்கம்) போன்ற பல வல்லுநர்களின் கச்சேரிகள் நடைபெற்றன. சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் இசை விழா நினைவுக்குவரத்தான் செய்தது.

விழா நடைபெற்ற கிளீவ்லாந்து பல்கலைக் கழக அரங்கத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பாடகர்கள், புல்லாங்குழல் இசைப்பவர், வயலின் வல்லுநர்கள், வீணை வித்வான்கள் என்று அனைவரும் ஒருசேரப் பஞ்சரத்னக் கீர்த்தனைகளை இசைத்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பின்னர் தனி நபர் பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர் சிறுமியர் பக்க வாத்தியம் இன்றிப் பாடினர். அட்லாண்டா, பாஸ்டன், கலி·போர்னியா ஏன், பிரிட்டனி லிருந்தும் கூட வந்து பாடினர். ஆராதனை யின் முதுகெலும்பாக உள்ள கிளீவ்லாந்து சுந்தரம் அவர்கள் அனுபவம் மிக்க இசைக் கலைஞர்களை அறிவிப்பது போன்ற அதே ஆர்வத்துடன் இளம் பாடகர்களை அறிவித்தது மனதைக் கவர்ந்தது.

மறைந்த நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மெளலானா அவர்களின் நினைவாக அவரது பேரன்களான சுபன் காசிம், சுபன் பாபுவின் நாதஸ்வர இசை நடைபெற்றது. அபூர்வமான சரசாங்கி இராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனையையும் வாசித்தனர்.

நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது சுதா ரகுநாதன் அவர்களின் கச்சேரி. இவரது இனிய குரலுக்கும் தெளிவான பாடலுக்கும் நிரம்பி வழிந்த அரங்கமே மயங்கி நின்றது என்றால் மிகையல்ல.

இசைப்பிரியன் கே.கே
தமிழில்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com