கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோயம்புத்தூரில் நடக்கும் எனத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ளார்கள். 2001 ஜனவரி 21 முதல் 24வரை நான்கு நாட்கள் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆயினும் பின்னர் இது குறித்து நடந்த கலந்தாய்வுக் கூட்டம், மாநாட்டை 2010 ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் நடத்துவதாகத் தீர்மானித்தது. "ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிடவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும்" என்பதே இந்தக் கால நீட்டிப்புக்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

இதற்காகத் தனி இணைய தளம் ஒன்றைத் தொடங்குவது என்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதலைப் பெறுவது என்றும் முதல்வர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவரும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவருமான டாக்டர் வா.செ. குழந்தைசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கான நிகழ்வுகளில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும், டாக்டர் வா.செ. குழந்தைசாமியும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த மாநாடு தமிழுக்கும் தமிழருக்கும் பீடும் பெருமையும் தருவதாக அமையத் தென்றல் வாழ்த்துகிறது.



© TamilOnline.com