இரானியப் படம் 'ஸ்க்ரீம் ஆஃப் த ஆன்ட்ஸ்'
சமீபத்தில் நான் பார்த்த இரானியன் படமான 'Scream of the Ants' என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பார்ஸி மொழிப் படம் ஆங்கில சப்டைட்டில்களுடன் இருந்ததால் ரசிப்பது எளிதானது.

படம் என்னைக் கவரப் பல காரணங்கள். முழுக்க முழுக்க இரானியப் படக் குழுவினரால், இரானிய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படம். எடுக்கப்பட்ட இடம் இந்தியா. கதை இந்திய மண்ணைப் பின்னணியாகக் கொண்டது. இந்தியாவின் புனிதத் தலமான காசியும், ராஜஸ்தானும் கதையின் பிரதான பாத்திரங்கள் என்றே சொல்லலாம்.

கதை மிகவும் சுருக்கமானதுதான். குழந்தைப் பிறப்பிலிருந்து கடவுள் உண்டா, இல்லையா என்பதுவரை எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்யும் ஓர் இரானியத் தம்பதி, ஏதோ ஒரு 'ஆன்மீகத் தேடல்' உந்துதலால் இந்தியா வருகிறார்கள். இந்தியாவின் எந்தக் கோடியிலோ உள்ள ஒரு பழுதில்லா முழுமனிதனைக் கண்டால் தங்கள் தேடல் முழுமை பெறும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்தத் தேடல் அவர்களுக்கு பலவிதமான விசித்திர அனுபவங்களைத் தருகிறது. தேடல் முழுமை பெறுகிறதா, எப்படி என்பதுதான் கதையின் முடிவு.

##Caption## இப்படத்தின் ஒரு காட்சி என் மனதை விட்டு அகல மறுக்கிறது. வெயிலிலும் புழுதியிலும் அலைந்து அலைந்து 'முழு மனிதனை' தேடும் தம்பதிகள் பல அவலக் காட்சிகளைக் காண நேரிடுகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட கணவன், மனைவியிடம், 'கடவுள் ஏன் பணக்காரனென்றும் ஏழையென்றும் படைத்தான்? வறுமைக்கும் இந்த அவலங்களுக்கும் அவன் பதிலென்ன?' என ஆதங்கத்தோடு கேட்கிறான். அதற்கு நிதானமாக அவன் மனைவி தரும் பதில்கள் மிக அருமையானவை. அவற்றில் ஒன்று: “நீ கேட்கும் இக்கேள்விகளுக்கு கடவுள் அளிக்கும் பதில் நிச்சயமாகப் புனித சோஷியலிசம் அல்ல.”

வறுமையிலும், துயரங்களிலும் உழலும் மனிதர்களுக்குக் கடவுளின் பதில், அவர்கள் அனுபவிக்கும் சிறு சிறு சந்தோஷங்களே - பசித்தவனுக்கு ஒரு வறண்ட ரொட்டித்துண்டை உண்பது சந்தோஷம். தாகத்தால் நா வறண்டவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஆனந்தம். வேலையால் மிகக் களைத்தவனுக்கு சிலமணி நேரத் தூக்கம் பேரானந்தம்.

ஒரு மனிதனின் ஆனந்தம், அவன் ஒன்றை இழந்து அதை மீண்டும் பெறுகையில்தான். மனித ஆனந்தம் முற்றும் துறப்பதில்தான். நீ நினைப்பது போல எல்லாவற்றையும் அடைவதில் அல்ல.

மனித சந்தோஷம் என்பது அழிக்க முடியாமல் அழுத்தமாக வரைந்த கோடல்ல. அது, வாழ்க்கையில் அவ்வப்போது அங்குமிங்குமாக எழுந்த சிரிப்பலைகளும் ஆனந்த கணங்களும் கொண்ட சிறிய புள்ளிகளின் சேர்க்கையான ஒரு நேர்கோடு.

எத்துனை அருமையான வார்த்தைகள்! இது போன்ற சக்தி வாய்ந்த வசனங்கள் படம் முழுவதும் உள்ளன. படத்தில் வரும் கங்கைக் காட்சிகள், நாயகியான இஸ்லாமியப் பெண் புனித கங்கையில் கையைக் கூப்பிக் கொண்டு முழுகி முழுகி எழும் காட்சிகள், படம் முழுவதும் பின்னணியில் ஒலிக்கும் சமஸ்கிருதப் பாடல்கள் நம்மை எங்கோ இழுத்துச் செல்கின்றன.

இவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், இது கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டுமே. சில காட்சிகளை ஆபாசம் என்றே கூடச் சொல்லலாம். நிச்சயமாகக் குழந்தைகளுடன் பார்க்க முடியாது. இருப்பினும், கதையின் கருவும், நறுக்குத் தெறித்த வசனங்களும் 'எனக்குப் பிடிச்சது' என்று சொல்ல வைக்கிறது. சன்னிவேல் நூலகத்தில், அந்நிய தேசப் படங்கள் பகுதியில் கிடைக்கும். பார்த்து மகிழுங்கள்.

மாலா பத்மநாபன்,
சன்னிவேல், கலிபோர்னியா

© TamilOnline.com