போக்கு-வரத்து நெரிசல்!
பிரதானக் கட்சிகள் வேட்பாளர் தேர்வு செய்த பின், விண்ணப்பித்துக் கிடைக்காத பிறருக்கு ஏமாற்றமும் கோபமுமே மிஞ்சும். தலைமைக்குக் கடிதம் எழுதுவது, தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது போன்றவற்றின் மூலம் அதிருப்தி யாளர்கள் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

தமது முயற்சி வெற்றி பெறாவிட்டால் எதிரணிக்கு மாறிச்சென்று முன்பு இருந்த கட்சியைப் பற்றிப் பரபரப்பாக அறிக்கை அளிப்பதும் வழக்கமாகி வருகிறது. அ.தி.மு.க.வில் அத்தகைய அதிருப்தி நிலவினாலும், அங்கு எல்லாமே ‘அம்மா’ தான் என்பதால் பெரிய அளவில் அதிருப்தி வெடிக்கவில்லை. ஆனால் தி.மு.க.வின் வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி வெளிப்படையாகக் காணப்படுகிறது. ஏ.ஜி. சம்பத் முகையூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிட்டாததால் தலைமையிடம் கோபம் கொண்டு, தி.மு.க.விலிருந்து விலகிச் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

கருணாநிதியின் சொந்த ஊரான திரு வாரூரில் வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தற்போது எம்.ஏல்.ஏ.வாக இருக்கும் அசோகனுக்குச் சீட்டு மறுக்கப் பட்ட கோபத்தில் கட்சியி லிருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். சட்டச் சபையில் முதல்வருக்கு எதிராக ஆக்ரோஷ மாகப் பேசியவர் அசோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வின் இலக்கிய அணித் துணைத் தலைவரான கவிஞர் நிர்மலா சுரேஷ், நெடுங்காலமாகத் தி.மு.க.வின் மேல் அதிகப் பற்றுக் கொண்டவர் என்பதும், குறிப்பாகத் தி.மு.க தலைமையின் மேல் பாசம் கொண்டவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது. அவர் அண்மையில் ஜெயலலிதாவின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தது ஆச்சரியத்தை அளிக்கத் தவரவில்லை.

இந்த வரிசையில் கடைசியாக இணைந்திருக்கிறார்கள் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா. சரத்குமார் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பின ராக இருக்கிறார்.

சமீபகாலத்தில் தன்னைக் கருணாநிதியின் குடும்பத்தினர் அவமானப்படுத்தி வருவ தாகப் புகார் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடிதம் அனுப்பிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாடார் சமூகத்தை சேர்ந்த சரத்குமார், தேர்தலில் தங்கள் சமூகத்தினருக்கு போட்டியிடுவதற்குப் போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதில் தி.மு.க.வின் மேல் கோபம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தி.மு.க.வில் இப்படி என்றால் அ.தி.மு.க. வில் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சேட பட்டி முத்தையா, இந்திரகுமரி போன்றவர்கள் திடீரென்று தி.மு.க.வில் சேர்ந்ததோடு, தி.மு.க.விற்காக தாங்கள் செருப்பாக உழைக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகக் காங்கிரஸில் சாதாரண காலத்தி லேயே உட்கட்சிப் பூசல் மிக அதிகம். நீண்ட இழுபறிக்குப் பின்பு காங்கிரஸ் தனக்கான தொகுதிகளை அடையாளம் கண்டு கொண்டது.

ஆனால் வேட்பாளர் பட்டியலை அறிவித்த வுடன் பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றவேண்டும் என்று அதிருப்தியாளர்கள் குரல் கொடுப்பதும், எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதும் அன்றாடச் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் ஆதாயமே அனைவரின் அடிப் படைக் கொள்கை ஆனபின்பு, லட்சியம், மக்கள் நலன் போன்றவை தெருவோரத்தில் கேட்பாரற்றுப் பரிதவிப்பதாகத்தான் தோன்றுகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com