சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 15, 2009 அன்று சாரடோகா ஹைஸ்கூல் மெக்பீ சென்டரில் அபிநயா டான்ஸ் கம்பெனி மாணவி சிந்தூரா ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. ‘ஸ்ரீ மஹாகணபதிம் பஜேஹம்' (அடாணா) பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் ‘கஜானனம்' எனும் ஸ்லோகத்தில் கணபதியையும், ஆண்டாள் கவுத்துவத்தில் கோதையின் விஷ்ணு பக்தியையும் சிந்தூரா விவரித்த விதம் அருமை.

அடுத்து வந்த ஜதிஸ்வரத்தில் ரஸாளி ராகத்தில் அமைந்த ஜதிக் கோர்வைக்கு ஏற்றபடி ஆடியதும், ஸ்வரக்கோவைகளை எடுத்துப் பாடியதும் அருமை. ‘எங்கும் நிறைந்த' எனத் தொடங்கும் மதுரை முரளிதரனின் பந்துவராளி வர்ணத்திற்கு தசாவதாரக் காட்சிகளை அபிநயித்த விதம் தத்ரூபம். பாஸ் ராகத்தில் ஜாவளி, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்குக் கண்ணனின் குறும்புகளை விதவிதமாக அபிநயித்த விதம் சிறப்பு.

இறுதியாக, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் கதன குதூகல ராகத் தில்லானாவைக் கால்களில் வேகம், முகபாவம், கவனம் செலுத்தி ஆடியது சிறப்பு. குரு மைதிலி குமாரின் பயிற்சி பாராட்டத்தக்கது. ரூபா மஹாதேவனின் இசை, சாந்தி நாராயணன் தம்பதியினரின் வயலின், மிருதங்க வாசிப்பு, மைதிலி, மாளவிகா குமாரின் நட்டுவாங்கம் யாவும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

சீதா துரைராஜ், சான் ஹோசே, கலி.

© TamilOnline.com