நிஹாரிகா, அல்பா ஸாங்கவி பரதநாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 18, 2009 அன்று ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி மாணவியர் நிஹாரிகா, அல்பா ஸாங்கவி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம், சாரடோகா உயர்நிலைப்பள்ளி மெக்பீ சென்டரில் நடந்தது. டாக்டராகப் பணிபுரியும் நிஹாரிகா தனது 11 வயது மகள் அல்பா ஸங்கவியுடன் இணைந்து நாட்டிய அரங்கேற்றம் செய்தது பாராட்டத் தக்கது. ‘வரவல்லப ரமணா' என்னும் விநாயகர் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து சந்த் ஞானேஸ்வர் இயற்றிய மராட்டிய மொழி கணேசர் துதி சிறப்பாக இருந்தது. நளினமான அசைவுகளுடனும் நல்ல தாளக்கட்டுடனும் கானடா ராகத்திலான சங்கீர்ண துருவ ஜதிஸ்வரத்துக்கு ஆடித் தமது திறமையை மாணவியர் இருவரும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து சங்கராபரண ‘தீனபந்து தேவர' வர்ணத்துக்கு தசாவதார நிகழ்ச்சிகளை அபிநயித்த விதம் அருமை. பிரகலாதன், ஹிரண்யகசிபுவின் உணர்வுகளை வெளிப்படுத்தியது, ‘பன்னக சயனா, நாராயணா' எனும் வரிக்கு நிஹாரிகா அபிநயித்ததும், அல்பா ஸாங்கவி பாற்கடலைக் கடந்தவிதம், கிருஷ்ணா என்னைக் கைவிடலாமா எனக் கெஞ்சியது என எல்லாமே மிகவும் தத்ரூபம்.

அடுத்து மோஹன ராக ஸ்ரீ நர்த்தகி பஜனைப் பாடலுக்கு நிஹாரிகா, ‘ஸ்ரீநாத் ஸ்ரீ போலோ, யமுனா ஸ்ரீ போலோ' என்னும் இடத்தில் பக்திரசம் சொட்டச் சொட்ட பலத்த கைதட்டலுக்கிடையே ஆடியது சிறப்பு. ‘மைத்ரீம் பாவனோ' பாடலுக்கு அல்பா ஸாங்கவி மிக அனுபவித்து ஆடினார். ‘ராதிகா கோரீஸே' பாடலுக்கு இருவரும் கோகுலத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தினர். கடைசியில் 'ராதே மஹாராணிகி ஜெய்' எனக் கோலாட்டம் ஆடி முடித்தது அழகு.

தனஸ்ரீ ராகத் தில்லானாவுக்கு இருவரும் சிறப்பாக ஆடி கரகோஷத்தைப் பெற்றனர். குறிப்பாக கண்ணன்-ராதையைக் கண்முன் நிறுத்தி வேகமாக ஆடும்போது பாவபூர்வமாக ஆடுவதிலும் கவனம் செலுத்தியது மெச்சத் தக்கது.

முரளி பார்த்தசாரதி (குரலிசை), வாசுதேவன் (நட்டுவாங்கம்), வீரமணி (வயலின்), தனஞ்ஜெயன் (மிருதங்கம்) ஆகியோர் நிகழ்ச்சியைச் சோபிக்கச் செய்தனர்.

குரு விஷால் ரமணி அவர்கள் தந்த பயிற்சி, மாணவிகளின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு என அனைத்தும் பாராட்டத் தக்கது. இருவரும் தாயும் மகளும்போல் அல்லாமல் சகோதரிகள் போன்ற தோற்றப் பொலிவுடன் ஆடியது சிறப்பு.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலி.

© TamilOnline.com