ஜெயந்தி சங்கர் நூலுக்கு 'திசையெட்டும்' மொழிபெயர்ப்பு விருது
தென்றலில் தொடர்ந்து மலேசிய/சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி வந்த ஜெயந்தி சங்கர் அவர்களின் ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற நூல் ‘நல்லி திசையெட்டும் விருது 2009' பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கவிதைகளின் தமிழாக்கத் தொகுப்பான இந்த நூல் ஆதிகாலந்தொட்டு நவீன காலம் வரையிலான சீனக் கவிதைகளைக் குறித்ததொரு சிறந்த அறிமுகமாக விளங்குகிறது.

‘திசையெட்டும்' காலாண்டிதழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மொழிபெயர்ப்பாளர்களைப் பெருமைப்படுத்துவதற்காக இந்த விருதை வழங்குகிறது. மொழிபெயர்ப்பாளரின் ஒட்டுமொத்த பெயர்ப்புப் பணியையும் கவனத்தில் கொண்டு நல்லி குப்புசாமி அவர்களின் ஆதரவில் வழங்கப்படுகிறது. பிறநாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கு, இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்று பல்வேறு பிரிவுகளில் தெரிந்தெடுத்த நூல்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இதைப் பெறும் பிற எழுத்தாளர்களில் பாவண்ணன், மதுமிதா, நாகூர் ரூமி ஆகியோர் அடங்குவர்.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் “இந்தப்புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மிதந்திடும் சுயபிரதிமைகள்-சீனக் கவிதைகள் (ஆங்கிலம்வழி); உயிர்மை பதிப்பகம்; பக்கங்கள் 320; விலை: ரூ 90

© TamilOnline.com