சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
ஜூன் 7, ஞாயிறு அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் மற்றும் கவியரசர் கண்ணதாசன் படைப்புகளில் உள்ள கவி நயங்களைக் குறித்து பேரா. விசாலாட்சி அவர்களின் இலக்கிய உரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் விசாலாட்சி அவர்கள்.

பத்துக்கும் மேற்பட்ட வர்ண உவமைகளைக் கம்பன் எவ்வாறு ராமாயண கதைச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் அவர் விளக்கினார். எடுத்துக்காட்டாக, சூர்ப்பனகை, மாறு வேடமிட்டு ராமனைக் காண வருகையில், கம்பன் ஒவ்வொரு வார்த்தையிலும், முதலிலும், முடிவிலும் வல்லின எழுத்துக்களையும், இடையில் மெல்லின எழுத்தையும் போட்டு, எப்படி அரக்கியானவள் மென்மையாக மாறு வேடமிட்டு வருகிறாள் என்பதைச் சந்த நடையுடன் பாடிக் காட்ட, நம் கண் முன்னே அந்தக் காட்சி விரிந்தது. அவல உணர்ச்சிகளைக் காட்டுமிடத்தில் ஒரே சொல்லை இருமுறை பயன்படுத்துவோம் என்பதை கம்பன் காட்டிய விதத்தை அழகுற விளக்கினார். வெறும் நெடில் எழுத்துக்களாலேயே அல்லது குறில் எழுத்துக்களாலேயே சூழலுக்கு ஏற்பப் பாடல்களை அமைத்துள்ள விதத்தைச் சிறப்பாகக் கூறினார். பிறகு பண் எனப்படும் ராகங்கள் சிலவற்றை, பூபாளம், காபி, வசந்தா, அடாணா ராகங்கள் மூலம் கம்பன் பாக்களில் எவ்வாறு பொருந்தியுள்ளது என்பதைப் பாடிக்காட்டி விளக்கினார்.

அடுத்ததாகக் கண்ணதாசனின் திரைப்பாடல்கள், தனிப்பாடல்கள் ஆகியவற்றிலிருந்து உதாரணங்களைக் கூறி, எவ்வாறு கண்ணதாசன் கம்பனைப் போன்றே சொல்லாட்சியிலும், பொருளாட்சியிலும், கருத்தாக்கத்திலும் தனித்துயர்ந்து காணப்படுகிறான் என்று விளக்கினார். உதாரணமாக, பெண்கள் பருவ வயதுக்குப் பின் மென்மையாகிறார்கள் என்பதைக் கண்ணதாசன் தன் பாடலில், ஒரே எழுத்தில் வித்தியாசப்படுத்திக் காட்டும் திறமையை (“மலர்த்தேன்”, “மலர்ந்தேன்”) விவரித்தார். கவியரசர் தன் பாடல்களில் வாழ்வியல் நிலைகள், காதல், தெய்வீகம், தத்துவம், சமயம் என எல்லாவற்றையும் மொழிநயத்துடன் அமைத்திருக்கும் விதத்தை இசையுடன் பாடி விரிவாக விளக்கிக் கேட்போரைப் பரவசப்படுத்தினார்.

நிகழ்ச்சியை சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் செயலர் மீனாட்சி சுப்பிரமணியன், துணைச் செயலர் பி.கே. அறவாழி ஆகியோர் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.

சந்திரசேகர், ஷோம்பர்க்,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com