இஸ்ரோ மீண்டும் சாதனை
விண்வெளித் துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. 'ரிசாட்-2' என்ற 'ரேடார் இமேஜிங்' செயற்கைக்கோளையும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தினர் உருவாக்கிய 'அனுசாட்' என்ற செயற்கைக் கோளையும் PSLV C12 வழியே ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ரிசாட்-2, நமது நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு உதவுவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும். எல்லாப் பருவநிலைகளிலும் ரேடார் உதவியுடன் செயல்படக்கூடிய செயற்கைக் கோளான இது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவி செய்வதுடன், இந்தியாவின் எல்லைப் பகுதிகளையும் கண்காணிக்கும். 'அனுசாட்' என்பது கல்விக்காக, இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கும் முதல் செயற்கைக் கோள். வறட்சி, தரிசு நிலம், நகர்ப்புறத் திட்டமிடல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த செயற்கைக் கோள் தரும் தகவல்கள் பயன்படுத்தப்படும்.

அரவிந்த்

© TamilOnline.com