பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாள்
ஜனவரி 17, 2009 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவிலின் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடியது. சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தனது வரவேற்புரையில் எவ்வாறு பொங்கல் திருநாள், அனைத்து இந்தியாவிலும் மகர சங்கராந்தி போன்ற வெவ்வேறு பெயர்களில் ஒருசேரக் கொண்டாடப்படுகிறது என்பதையும், நம் பாரதப் பண்பாட்டை காஷ்மீர் முதல் குமரிவரை ஒருங்கிணைக்கும் கலாசார அடையாளத் திருவிழாவாக இருக்கிறது என்பதையும் விளக்கினார்.

குழந்தைகள் ராஹுல் பரத்வாஜ், ஸ்நேகா கீதாகிருஷ்ணன், சூர்யா சுந்தரேஷ் ஒருங்கிணைந்தும் செல்வி கீர்த்தனா ஸ்ரீகாந்த் தனித்தும் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் விரிகுடாப் பகுதியின் வளரும் தமிழ்க் கலைஞர்கள் வழங்கிய கர்நாடக இசைப் பாடல்கள், வாத்திய இசை, சேர்ந்திசைப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நடனங்கள் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தொடர்ந்து ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் குழுவினர் சௌந்தர்ய லகரியின் தமிழ் வடிவப் பாடல்களைப் பாடினர். நடராஜரை வாழ்த்தி சுகந்தா ஐயர் குழுவினர் வழங்கிய நாட்டியம் காண்போரை மெய்மறக்கச் செய்தது. அடுத்து, ஆண்டாளின் திருப்பாவைக்கு அற்புதமாக அபிநயம் செய்தார் அஜிதா. 'மாடு மேய்க்கும் கண்ணா' என்ற காவடிச் சிந்து பாடலுக்கு அருமையாக நாட்டியமாடினார் ஷ்ருதி அரவிந்தன்.

'கொஞ்சும் மைனாக்களே' என்ற திரைப் பாடலைத் தன் நடனத்தினால் மெருகேற்றினார் ஹரிப்ரியா சுந்தரேஷ். தொடர்ந்தது சிறுவர்கள் வழங்கிய வாத்திய இசை. விஷால் சாக்சோஃபோன் வாத்தியத்தில் 'மஹா கணபதி' என்ற பாடலை வாசித்தார். சுபாஷ் ரமேஷ் பல சினிமாப் பாடல்களின் துடிப்புக்களை தன் அற்புதமான டிரம்ஸ் வாசிப்பில் நிகழ்த்திக் காண்பித்து பெரும் கைதட்டலைப் பெற்றார். இறுதியில் டாக்டர் கல்பகம் கௌசிக் சிறிய விநாடி வினா நிகழ்ச்சி ஒன்றினை வழங்கி, தமிழ்நாட்டின் சாதனை படைத்த பல அறிஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்கினார். தீபா மஹாதேவன் மற்றும் கல்பகம் கௌசிக் இணைந்து அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய ஆண்டாள் திருக்கல்யாணப் பாடல்களை அருமையாகப் பாடினர். ஹரிஹரன் சுப்புராஜ் பல்வேறு சுலோகங்களை அழகாகப் பாடினார். முத்தாய்ப்பாகப் பலவகைப் பொங்கல்களும், பிற சிற்றுண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏப்ரல் 25, 2009 அன்று சன்னிவேல் இந்துக் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை பாரதி தமிழ்ச் சங்கம் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

மேலதிகத் தகவல்களுக்கு:
இணையதளம்: http://www.batamilsangam.org

கோவிந்தராஜன்: 408.394.4279
சுந்தர்: 408.390.5257

மின்னஞ்சல் முகவரி: bharatitamilsangam@yahoo.com

ச.திருமலைராஜன்

© TamilOnline.com