மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
ஜனவரி 31, 2009 அன்று தேதி லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் கானசரஸ்வதி தன்னார்வக் குழுவினரால் தியாகராஜ ஆராதனையும், இதர வாக்கேயக்காரர்கள் விழாவும் கொண்டாடப்பட்டது. முதலில் ஸ்ரீ ராமருக்கும், தியாகையருக்கும் தீபாராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. கிருஷ்ணா சம்பத் வரவேற்புரை வழங்கினார். இசைக்குழுவினர், தியாகராஜரின் 'ஸ்ரீ கணபதினி' பாடலுடன் துவங்கி பஞ்சரத்ன கிருதிகளைப் பாடினர். விழாவின் துவக்கமாக, சக்தி சுந்தர் பேஸ் கிளாரினட்டும், லியோனஸ் தவிலும், சுந்தர் டம்போரினும் வாசித்தனர். இசை ஆசிரியர்கள் கானசரஸ்வதி, கல்யாணி சதானந்தம், கல்யாணி வீரராகவன், சுபா நாராயணன், பத்மா குட்டி, சங்கரி செந்தில்குமார், இந்து நாகு, கீதா பென்னட், வசந்தா பட்சு, பாபு பரமேஸ்வரன், திருவையாறு கிருஷ்ணன், டெல்லி சுந்தர்ராஜன் ஆகியோர் தமது சீடர்களுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தியாகையர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சுப்பராய சாஸ்திரிகள், அருணாசலக் கவிராயர், புரந்தரதாஸர் மற்றும் பல வாக்கேயகாரர்களின் பாடல்களைப் பாடினர்.

பாபு பரமேஸ்வரனின் சிஷ்யர்கள் கீபோர்டும், வசந்தா பட்சுவின் சிஷ்யர்கள் வீணையும், கானசரஸ்வதியின் சிஷ்யர்கள் பல்கருவி இசையும் வாசித்தனர். கீதா ராகவன் (வீணை), கணேஷ் பஞ்சாபகேசன் (புல்லாங்குழல்), அந்தர ரூப சிவதேவா பண்டஹார்ப் (கிடார்), கிரண் ஆத்ரேயா, அஜய் நரஸிம்ஹன், அனு மூர்த்தி, நிஷாந்த் (வயலின்) அனைவரும் அருமை. ராமகிருஷ்ணன், ஆதித்யா, ஹரிஅசூரி, சங்கீதா, மயூரி வாசன், மைசூர் கார்த்திக் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இசைவிழா இயக்குநர் கானசரஸ்வதி தன் மகள் சங்கீதாவுடன் இணைந்து பாடிய மங்களம் வெகு சிறப்பு.

ஸ்ரீநிவாசன், ஆதித்யா, லியோனஸ், சுந்தர் ஆகியோர் மிருதங்கம், கடம், தவில், டம்போரின் வாசித்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். கிரிதர் அவர்கள் மலிபு கோவில் சார்பில் அனைத்துக் கலைஞர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அருண் சங்கரநாராயணன் நன்றி கூற, மங்களத்துடன் விழா முடிவுற்றது.

© TamilOnline.com