லெமாண்ட் ஹிந்து ஆலயம் தைப்பூசத் திருவிழா
முருகப் பெருமானுக்குத் தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை போன்ற நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பானது. அவற்றுள் தைப்பூச வழிபாடு மிகப் பழமையானதாகும். தைப்பூசத்தன்று காவடி எடுப்பதும் பால்குடம் எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது.

பிப்ரவரி 7-8, 2009 நாட்களில் லெமாண்ட் இந்து ஆலயத்தில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல்நாள் ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் பூஜை துவங்கியது. பின் நவகலச பூஜைகள் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை வழிபாடு செய்யப்பட்டது. தைப்பூச தினமான ஞாயிற்றுக் கிழமையன்று சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. பக்தர்களின் முயற்சியால் செய்யப்பட்ட தங்கத்தினால் ஆன வேல், கொடி ஆகியவை முருகனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்களால் அவற்றுக்குப் பாலபிஷேகம் செய்யப்பட்ட பின் புனிதநீர் அபிஷேகமும் செய்யப்பட்டது. அதன்பின் ஸ்ரீ முருகப்பெருமானுக்கும் தேவியருக்கும் காய், கனி வகைகளால் 'சாகம்பரி' அலங்காரம் செய்யப்பட்டுப் பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்றவை பாராயணம் செய்யப்பட்டன. பரதநாட்டியம் நடைபெற்றது. சுமார் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அன்னதானமும் வழங்கப்பட்டது.

சதீஷ்

© TamilOnline.com