துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
மும்பை ஸ்ரீ ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸில் செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., எம்.எஸ். ஆகியோரின் கச்சேரிகளை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததுண்டு. முதல்நாளன்று நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாதஸ்வரம். இரண்டாவது நாளன்று செம்பையின் கச்சேரி. அதற்கு எம்.எஸ். அம்மா வந்திருந்தார்கள்.

நான் சொல்வது 1952ல். அப்போதெல்லாம் ஷண்முகானந்தா அரங்கம் கட்டப்பட்டிருக்கவில்லை. கிங்க்ஸ் சர்க்கிள் ரயில்நிலையத்தின் அருகேயுள்ள மைதானத்தில் அமைக்கப்பட்ட பந்தலில்தான் கச்சேரிகள் நடக்கும். அடிக்கடி லோக்கல் ரயில் தடதடவென்று ஓடுவதில் பந்தலே அதிரும். கச்சேரியின்போது இது ரசிகர்களுக்கும் தொந்தரவாக இருந்தது. செம்பையின் கச்சேரியில் துக்கடா பாடும் நேரம். முன்வரிசையில் அமர்ந்திருந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை ஒருமுறை அவர் பார்த்துவிட்டு 'பாலத்தின்மீது ரயில் ஓடக் கண்டேன்' என்று பாடினாரே பார்க்கலாம். அது 'வானத்தின்மீது மயில் ஆடக் கண்டேன்' என்ற எம்.எஸ்.ஸின் பிரபல பாடல் ராகத்தில் இருந்தது. அவ்வளவுதான், எம்.எஸ். உட்பட எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்கள். செம்பையின் இந்த சமயோசித நகைச்சுவைத் திறன் அப்போதெல்லாம் மிகப் பிரபலம்.

ஐந்தாவது நாளன்று எம்.எஸ். அவர்கள் ஜி.என்.பி.யின் கச்சேரிக்கு வந்திருந்தார். கல்யாணியில் அமைந்த ராகம், தானம், பல்லவியும் பாலக்காடு மணி ஐயரின் தனி ஆவர்த்தனமும் முடிந்தது. எம்.எஸ்., சதாசிவம் இருவரும் வெளியே போக எழுந்தனர். இதைப் பார்த்த ஜி.என்.பி. 'நல்ல சகுனம் நோக்கி செல்லடி' என்ற அவருக்குப் பிடித்த ஷண்முகப்ரியா ராகப் பாடலைப் பாடினார். அவையே சிரிப்பில் அதிர்ந்தது. எம்.எஸ். கூடத்தான்.

சிறு வயதிலிருந்தே நானும் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் ரசிகன். எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும்போதே என் ஊரான நூரணியிலிருந்து 22 மைல் நடந்து ஆலத்தூருக்கு அவரது கச்சேரியைக் கேட்பதற்காகப் போயிருக்கிறேன். அவர் நடித்த சகுந்தலை அவரை மிகப் பிரபலமாக்கியது. அதில் ஜி.என்.பி. துஷ்யந்தனாக நடித்திருந்தார். தென்றல் ஜனவரி 2009 இதழில் அவரைப் பற்றி வெளியான துணுக்குச் செய்திகள் என் நினைவுகளின் ஆழத்திலிருந்த இந்தச் சம்பவங்களை வெளிக்கொணர்ந்தன.

நூரணி சிவம், டிராய், மிச்சிகன்

© TamilOnline.com