சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
கடந்த ஜனவரி மாதம் சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவை 4S ரான்ச்சில் உள்ள ஸ்டோன் ரான்ச் பள்ளி அரங்கில் மிகச் சிறப்பாக நடத்தியது. கணபதியின் மீதான கடவுள் வாழ்த்து நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாறுவேடப்போட்டியில் ஆண்டாள், ஹனுமான், பட்டு மாமி, மாமா, எம்.ஜி.ஆர், குறவஞ்சிப் பெண்கள் என விதவிதமான வேடங்களில் வந்து சிறுவர்கள் பாராட்டைப் பெற்றனர். தொடர்ந்து நடந்த ஃப்யூஷன் நடனம் சிறப்பாக இருந்தது. சிறுமிகளின் 'ஒவ்வொரு பூக்களுமே' வெகு அழகு.

கண்ணனின் லீலைகள் நாட்டிய நாடகம், முகுந்தா முகுந்தா பாடல், தசாவதார அபிநயம் என அனைத்தும் அற்புதம். விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் பாடலுக்கு கும்மி, கோலாட்டம், காவடி என்று ஆடி அபிநயித்தனர் சிறுமிகள். 'கண்ணா மூச்சி ஏனடா' பாடலுக்கு ஆடிய சிறுமி மனதைக் கவர்ந்தாள். தொடர்ந்து சாண்டியேகோ தமிழ்ப் பள்ளி வழங்கிய பாடல்களும் நடனங்களும் சிறப்பாக இருந்தன.

காளியைப் புகழும் பாடல், கீபோர்டு இசை, பரத நாட்டியம் என நிகழ்ச்சி களை கட்டியது. குறிப்பாக 'ஸ்விங் பண்ணுங்கோ சாண்டியேகோ' என்ற பாடலை, இயற்றி, மெட்டமைத்து, நடனம் ஆடிய நான்கு கணவன்-மனைவி ஜோடிகளின் ஆட்டம் சிறப்பு. 'அதிரடிக்காரன்' பாடலுக்கு ஆடிய ஜோடியின் ஆட்டம் பிரமிக்க வைப்பதாய் இருந்தது. தூய தமிழில் நிகழ்ச்சி தொகுத்தளிக்கப்பட்டதும், 80 பேருக்கு மேல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும், பார்வையாளர்களாக 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும் நிகழ்ச்சியின் பிற சிறப்பு அம்சங்களாகும்.

ஆர்த்தி ஸ்ரீவாஸ்

© TamilOnline.com