பிப்ரவரி 2009: வாசகர் கடிதம்
என் தென்றல் படிக்கும் ஆர்வம் தெரிந்து என் மாப்பிள்ளை தென்றலுக்குச் சந்தா செலுத்துகிறார். 'இந்த நல்ல காரியம் செய்பவர்களுக்கு நம்மாலான உதவி' என்கிறார். இதில் எல்லாம் நன்றாக இருக்கிறது. சில வருடங்களாகப் படித்து வருகிறேன். மிக நன்றாக நடத்தப்படும் பத்திரிகையாக விளங்குகிறது. ஜனவரி 2009 இதழில் வெளிவந்த 'பவித்ராவின் போராட்டம்', 'வாழ்வில் வந்த வசந்தம்' ஆகிய 2 சிறுகதைகளும் நன்றாகவும், நல்ல கருத்தைச் சொல்வதாகவும் உள்ளன.

ஹேமா ராமகிருஷ்ணன்
*****


எல்லே சுவாமிநாதனின் கதை மிக நன்றாக இருக்கிறது. ஆனந்த விகடனில் தேவன் அவர்கள் எழுதுவதைப் போல வரிகள் உள்ளன. நகைச்சுவை சிறப்பாக இருக்கிறது. இன்னும் நிறைய நகைச்சுவைச் சிறுகதைகள் எழுதுங்கள்.

பாலகிருஷ்ணன் (ஆங்கிலக் கடிதத்தின் தமிழ்வடிவம்)

*****


தென்றலின் எளிய, இனிய தமிழ் நடையும், அடங்கியுள்ள பல்வகைப் படைப்புகளும் என்னை மிகவும் கவர்ந்தன. ஒரு தமிழ் ஆர்வலர் என்ற முறையில் பல்வேறு பட்டிமன்றங்களில் கலந்தும் கவிதைகளைக் கவியரங்கில் பாடியும், பத்திரிகைகளில் எழுதியும் வருகிறேன். தென்றலைப் புகழ்ந்து ஒரு கவிதை...

தென்பொதிகைத் தென்றல்
வளங்கொழிக்கும் அமெரிக்கா வாழ் தமிழர் உழைப்பாலே
உளம் மகிழத் திங்கடொறும் உலவிவரும் தென்றலிது;

அளப்பரிய செய்திகளை அருந்தமிழர் பெருமைகளை
எளியதமிழ் நடையாலே இனிதுரைக்கும் தென்றலிது;

சிந்தனையைத் தூண்டுகின்ற சிறுகதைகள், கட்டுரைகள்
தந்துநமைக் குளிர்விக்கும் தென்பொதிகைத் தென்றலிது;

தென்னாட்டின் உணவகங்கள் சமையலுக்கும் பல பொருட்கள்
இந்நாட்டில் கிடைக்குமிடம் எடுத்தியம்பும் தென்றலிது;

ஆன்மீக நெறிவளர்க்கும் அரும்பணியைச் செய்வதுடன்
பான்மையுடன் மருத்துவமும் பயிற்றுவிக்கும் தென்றலிது;

நாவிற்கு விருந்தளிக்கும் நற்சமையல் குறிப்புகளும்
மேவிவர, மூளைக்கும் வேலை தரும் தென்றலிது;

இம்மண்ணில் நிகழ்கின்ற இனியதமிழ் நிகழ்வெல்லாம்
நம் கண்ணில் காட்டுகின்ற நயமான தென்றலிது.

வடகரை மு. அப்துல் ரகுமான்,
டெட்ராய்ட்

*****


தென்றல் ஜனவரி 2009 இதழில் 'வார்த்தை சிறகினிலே' மேற்கோள்கள் சுவாரசியமாக இருந்தன. 'நலம் வாழ' பகுதி மிக உபயோகமானது. 'வாழ்வில் வந்த வசந்தம்' கதை அருமை.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா.

© TamilOnline.com