தியாகியின் போராட்டம்
இந்தியச் சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று கணவருடன் பலமுறை சிறை சென்றவர் தியாகி ரெங்கம்மாள் (85). தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக பிழைப்பிற்காகப் போராடி வருகிறார். தற்போது தனக்குக் கிடைக்கும் பென்ஷன் போதியதாக இல்லை என்பதால், எல்.பி.ஜி., காஸ் டீலர்ஷிப் கிடைத்தாலாவது குடும்ப வருமானம் உயரும் என்ற எண்ணத்தில் முகமை கேட்டுப் போராடி வருகிறார். மாநில அரசு பென்ஷன் பெறுவதால் டீலர்ஷிப் வழங்க முடியாது என காஸ் நிறுவனத்தினர் மறுத்து விட்டதால் மிகவும் மனம் தளர்ந்து இருக்கும் இவர், 'நான் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினேன். ஆங்கிலேயர்கள் கூட என்னை இழிவாக நடத்தவில்லை. டீலர்ஷிப் வழங்க மறுத்து இவர்கள் என்னை மிகவும் இழிவுபடுத்தி விட்டனர்' எனக் குமுறுகிறார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய 20 பெண் தியாகிகளில் தற்போது உயிருடன் இருப்பது ரெங்கம்மாள் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com