கீரை கார சுகியன்
தேவையான பொருட்கள்
கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறு துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
மைதா மாவு - 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
கீரையை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கீரை, வெங்காயம் போட்டு, உப்பும், மிளகாய்ப் பொடியும் சேர்த்து சுருள வதக்கவும். கோதுமை, மைதா, அரிசி மூன்று மாவுகளையும் சிட்டிகை உப்பும் பெருங்காயமும் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டிப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பின் கீரை பூரணத்தை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். தேவைப்பட்டால் 1 சிட்டிகை சோடா உப்பும் மாவில் போட்டுக் கொள்ளலாம். இந்தக் கார சுகியன் மொறு மொறுவென்று மிகவும் சுவையானதாக இருக்கும்.

இதே போல் உருளைக் கிழங்கு மற்றும் பிற காய்கறிகளையும் சேர்த்து பொரியல் செய்தும் சுகியன் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com