தேர்தல் வன்முறைகள்
அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வரலாறு காணாத வன்முறைகளுக்கும், அதிரடிச் சம்பவங்களுக்கும் எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்திருந்தது. நடைபெற்ற வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்ட 99 வார்டுகளில் உடனடியாக மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறித் தீர்ப்பளித்தார்.

முன்னதாக இருநபர் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி இப்ராஹிம் கலி·புல்லா சென்னை மாநகரில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 99 வார்டுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அளவுக்கு அதிகமாக வன்முறைகள் நடந்திருப்பதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் ஊடகங்களின் செய்திகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்று கூறியதைச் சுட்டிக்காட்டினார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி தேர்தல் சம்பந்தமாகப் பத்திரிகைககளில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அளவுக்கு அதிகமாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மற்றொரு நீதிபதியான முகோபாத்யா, இந்த வழக்குகள் செல்லாது என்றும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தார். இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தையடுத்து இதனை மூன்றாவது நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாக இருநீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அறிவித்தது.

இத்தீர்ப்பைத் தொடர்ந்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்து மறுதேர்தலுக்குத் தயாரானார்கள்.

மறுதேர்தல் நடத்தக் கோரி நீதிமன்றதை அணுகிய அ.தி.மு.க., மறுதேர்தலில் பங்கேற்காது என அறிவித்தது மட்டுமல்லாமல் தற்போதுள்ள தேர்தல் ஆணையர் பதவியில் இருக்கும் வரை சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த உள்ளாட்சி மன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றாலும் அதை அ.தி.மு.க புறக்கணிக்கும் என்று கூறிவிட்டது. ம.தி.மு.க.வும் இத்தேர்தலைப் புறக்கணித்தது.

விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகியவை தேர்தலில் போட்டியிட்டன. இதன்விளைவாகச் சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் நேரிடையாகப் பல இடங்களில் மோதுகிற சூழல் ஏற்பட்டது. ஆனால் வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான இறுதிநாளன்று ஏராளமான வேட்பாளர்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றதையடுத்து மொத்தம் 67 இடங்களுக்கே தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நாளன்று, சிறுசிறு சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடைபெற்றாலும், வாக்களிக்க மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை. சுமார் 30 சதவீதமே அன்று வாக்குப்பதிவானது.

59 இடங்களில் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. விஜயகாந்த்தின் தே.மு.தி.க. முதன்முதலாக 5 இடங்களைப் பிடித்தது. ஆனால் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மறுநாளே தே.மு.தி.க.வில் வெற்றிபெற்ற ஒருவர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.கவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. 2 இடங்களையும், மார்க்சிஸ்ட் 1 இடத்தையும் பெற்றது முக்கியமானதாகும்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மன்றத்தில் 99 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்தலாம் என்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பு சரியே என்றும், தேர்தல் நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையர் சரியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் நடைமுறையில் தலையிட நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று மூன்றாவது நீதிபதி பி.கே. மிஸ்ராவும் தீர்ப்பு அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், மாநிலத் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் இப்பிரச்னை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com