SIFA: பிரியதர்சினி கோவிந்த் பரதநாட்டியம்
நவம்பர் 2, 2008 அன்று சான்ஹோசே CET மையத்தில் பிரியதர்சினி கோவிந்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை சவுத் இந்தியா ஃபைன் ஆர்ட்ஸ் (SIFA) ஏற்பாடு செய்திருந்தது.

‘கஜவதனா' எனும் பாடல் விநாயகர் வந்தனம். தொடர்ந்து கம்பீரநாட்டையில் மல்லாரி, பின் ‘உலகெலாம் உணர்ந்து' எனும் அம்பலவாணனின் விருத்தமுடன் நிகழ்ச்சி ஆரம்பம். அடுத்து மதுரை முரளிதரன் அவர்களின் ஷண்முகப்ரியா ராக சடாக்ஷர கவுத்துவம். 'ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்' எனும் ஸ்லோகம் உருக்கமுடன் பாடப்பட்டு தொடர்ந்து சிறந்த சொல்கட்டு, தாளக்கட்டுடன் ‘வருகுது வருகுது வேல்'. கந்த சஷ்டி விழா சமயத்திற்கேற்ற பாடலைத் தேர்ந்தெடுத்து அளித்தது மிகப் பொருத்தம்.

'குனித்த புருவமும்' என்ற விருத்தத்தை அடுத்து நாட்டைக் குறிஞ்சியில் பாபநாசம் சிவனின் 'ஸ்வாமி நான் உந்தன் அடிமை' என்னும் வர்ணம். இதில் ‘தாமதம் செய்யாது வந்தருள்' என்னுமிடத்தில் காண்பித்த பாவங்கள் உடுக்கையுடன் ஆடும் தில்லை நடராஜனை நேரில் தரிசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி, ரசிகர்களிடையே பலத்த கரகோஷத்தைப் பெற்றார் நர்த்தகி. தொடர்ந்து ‘சிவ தீக்ஷாபரு', 'அப்புடு மனசு தெலுசு நடே' என்னும் பதம், ஜாவளி இரண்டிற்கும் அவர் ஆடியது அருமை. 'விஷமக்காரக் கண்ணா' எனும் ஊத்துக்காடு அவர்களின் பாடலுக்குக் கண்ணனின் பால லீலைகளைக் கண்முன் கொண்டுவந்தார்.

காளிங்க நர்த்தனத்தில் ‘மந்தஸ்' எனுமிடத்தில் பாம்பு சீறுவது போலவும் யமுனா தடாகத்தில் காளிங்கனை அடக்கிய விதமும் அருமை. பிருந்தாவனி ராகத் தில்லானாவில் அதிவேக ஜதிகள், துரிதகதிக் கோர்வைகளுக்கும் மின்னல் வேகத்தில் ஆடியது அற்புதம். இறுதியாக பானுதாசரின் மராட்டி அபங்கப் பாடலில் ப்ருந்தாவனத்தில் வேணு நாதத்தில் பறவைகள், மயில்கள், கோபிகள் மயங்கியது பற்றிய வர்ணனையின் முடிவில் ‘விட்டல விட்டல' எனும் சொல்லில் ப்ரேம பக்தியை வெளிப்படுத்தியது மிக அருமை.

பக்கவாத்தியக் குழுவில் திப்புராயர் (பாடல்), சிகாமணி (வயலின்), சஜிலா (நட்டுவாங்கம்), சக்திவேல் முருகன் (மிருதங்கம்) அனைத்தும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின

சீதா துரைராஜ்

© TamilOnline.com