வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு
நவம்பர் 9, 2008 அன்று பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சிறப்பு வரவேற்பு அளித்தது. காந்தீயவாதியான இவர் நலிந்தோர்க்கும், பெண்களுக்கும், சிறந்த தொண்டாற்றுவதைப் பாராட்டும் வகையில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் ஓபஸ் விருதினைப் (Opus Award) பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவிற்கு வந்திருந்தார்.

'வைஷ்ணவ ஜனதோ' பாடலுடன் விழா தொடங்கியது. மௌலி அவர்கள் பாரதியார் பாடல்கள் பாடினார். அடுத்து தீபா சுப்ரமணியம், வித்யா நாராயணன் ஆகியோரின் வீணையிசை செவிக்கு விருந்தாக இருந்தது.

தமிழ் மன்றச் செயலாளர் மகேஷ் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து வட கலிஃபோர்னியா சமணர் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணம்மாளைப் பாராட்டி உரையாற்றினார். அடுத்து ஃபிரிமாண்ட் நகரக் கவுன்சிலர் அனு நடராஜன் பாராட்டுரை வழங்கினார்.

சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணம்மாள் அவர்கள் இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும்தான் தனது வெற்றிக்குக் காரணமாக அமைந்து, தொண்டு செய்யத் துணிவைத் தந்தது என்று கூறினார். ராமானுஜர், ஆதிசங்கரர், வள்ளலார் பெருமான் ஆகியவர்களது வழிகாட்டுதல்களையும் எடுத்துக் கூறினார். 83 வயதிலும் மனோதிடத்துடன், செறிவாக அவர்கள் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.

கிருஷ்ணம்மாள் அவர்கள் இந்தியாவில் ஆற்றி வருகின்ற பணிகளைத் தொகுத்து சாந்தி நடராஜன் அவர்கள் விடியோ காட்சியாகத் திரையிட்டார்கள். மேலும் அவர் நிகழ்ச்சியையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

தமிழ் மன்றத்தின் சார்பாக அனு நடராஜன் அவர்கள் கிருஷ்ணம்மாள் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.

வினா, விடை நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடராஜன் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

காவேரி கணேஷ்

© TamilOnline.com