அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம்
நவம்பர் 16, 2008 அன்று சான்ஹோசே மெக்சிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. குரு, கணேச வந்தனத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் கங்கா, யமுனா, நர்மதா, காவேரி, கோதாவரி ஆகிய ஐந்து நதிகளை நினைவூட்டும் வகையில் ஐந்து மாணவியர் ஐந்து நிற உடைகளில் ஐந்து ராகங்களுக்கேற்ப நடனம் ஆடினர்.

பகீரதன் தவத்தையும், சீறிப் பாய்ந்த கங்கையை சிவன் திருமுடியில் தாங்கியதையும், சிவ தாண்டவத்தையும், சிவனின் தவத்தையும் ரசிகா குமார் மிக அழகாக ஆடினார். யமுனா நதிக்கரையில் கண்ணன் ஆடிய லீலைகளையும், கோபியர்களுடனான அவனது கொஞ்சல் விளையாட்டுக்களையும் அழகாக ஆடிப் பரவசப்படுத்தினாள் ஒரு சிறுமி. தொடர்ந்து நர்மதா நதிக்கரையில், கோழி கூவுதல் முதல் கன்றுக்குட்டி, மாடுகளின் சப்தம், நாற்று நடுதல், அணை கட்டுதல், வேலைக்கேற்ற கூலி கிட்டாத அவலத்தை நினைத்து வருந்துதல் என ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் கண்முன் கொண்டு வந்தது பாராட்டும்படியாக இருந்தது. இதை அன்றைய நாட்டியத்தின் சிகரம் எனக் கொள்ளலாம்.

அடுத்து அருணாசலக் கவிராயரின் 'வந்தாளே சூர்ப்பனகை' பாடலில் அரக்கி ராமனை மயக்க அழகி உருக்கொண்டு வருவது, சீதை அம்மியில் அரைத்தல், லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் சூழ்ச்சியை அறிந்து அவளை விரட்டுவது, அவள் கோபத்தில் தலையங்கியைக் கழற்றி எறிந்து விட்டு, லக்ஷ்மணனிடம் போரிட்டு மூக்கறுபடுதல், ராமனிடம் கெஞ்சுதல் ஆகிய யாவும் மிகத் தத்ரூபமாக இருந்தன. சூர்ப்பனையாக வந்த மைதிலி குமாரின் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.

இறுதியாக காவேரி வர்ணனை. அகத்தியர் கமண்டலத்தில் இருந்து கவிழ்ந்த காவேரி குடகு மலையில் தவழ்ந்து, அன்ன நடை, தளர்நடை நடந்து, நெளிந்து, சுளிவுடன் ஓடை அருவிபோல் மெதுவாக வந்துப் பின் வெள்ளப் பெருக்குடன் பாய்ந்து பொங்குவதை தாளகதிக்கேற்ப வர்ணித்தது சிறப்பாக இருந்தது. காவேரியாக ஆடி நடித்த விசாகா குமாரின் நாட்டியம் அருமை. துலா மாதத்தில் காவிரியின் மகிமையை விளக்கிப் பாடியது சிறப்பு.

இறுதியில் மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து புனித நதிகளின் தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் கலச பூஜைக்கான ‘கங்கேச யமுனேசைவ' மந்திரத்தைச் சொல்லி முடித்தது சிறப்பாக இருந்தது.

பாபு பரமேஸ்வரனின் உருக்கமான பாடல்களும், பக்கவாத்தியக் குழுவினரின் சிறப்பான வாசிப்பும், சிறப்பான நட்டுவாங்கமும் நிகழ்ச்சிக்குப் பெரும் பலம்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com