சதுரங்க இளைஞர் படை!
உலக செஸ் சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாம் முறையாக முடிசூட்டப்பட்டிருக்கும் வேளையில், அதே சதுரங்கத்தில் புதிய உலக சாதனை படைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் வளரும் இளம் தலைமுறையினர்.

மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ப்ரீத்தி சமீபத்தில் வியட்நாமில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை வென்றிருக்கிறார். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் முதலிடமும் தங்கப்பதக்கமும் வென்றிருக்கிறார் பி. அதிபன். இரண்டாவது இடத்தை எஸ்.பி. சேதுராமன் பெற்றிருக்கிறார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தை குஜராத்தைச் சேர்ந்த விதித் சந்தோஷும், பெண்கள் பிரிவில் பத்மினியும் பெற்றிருக்கின்றனர். 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பகுதியில் மூன்றாம் பரிசாக வெண்கலம் வென்றிருக்கிறார் போடா ப்ரத்யுஷா. சாதனை இளைஞர்களை வாழ்த்துவோம்.

அரவிந்த்

© TamilOnline.com