தி.மு.கவின் நூறு நாள் ஆட்சி!
தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 100 நாட்களை வெற்றிகரமாக தாண்டிவிட்டது. தங்களது நூறு நாட்கள் சாதனைகளை பல்வேறு நாளிதழ்களில் பட்டியலிட்டது தி.மு.க. அரசு.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கைப்பற்றிய தி.மு.க, தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. வெற்றிப் பெற்று முதல்வர் பொறுப்பை ஏற்றவுடனேயே தி.மு.க தலைவர் கருணாநிதி ரேஷனில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் சத்துணவில் முட்டை என்ற முக்கிய மூன்று தேர்தல் அறிக்கைளை நிறைவேற்றினார். அதுபோல் வண்ணத்தொலைக்காட்சி வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் படிப்படியாக வழங்கப்படவிருக்கிறது. அதற்கான ஏற்பாடு களை தீவிரமாக செய்துவருகிறது தமிழக அரசு. அதுபோல் திராவிட இயக்கத்தின் தலைவரும் சமூக சீர்த்திருத்தவாதியுமான தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி ஏழை விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்குவ தற்கான திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.

இலவச திட்டங்கள் ஒருபுறம் இருக்க, அனைத்து சாதியினரையும், அர்ச்சகராக்கும் திட்டம், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் ஆகிய முக்கிய மாசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றியுள்ளது தி.மு.க. அரசு. மேலும் துரித தொழில்வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதிய தொழில் கொள்கைகளை விரைவில் அறிவிக்க இருப்பதாக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com