இறந்தபின்னும் வாழலாம்...
அந்தச் இளைஞனின் பெயர் ஹிதேந்திரன். பெற்றோருக்குச் செல்லப் பையன். தந்தை அன்போடு வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனின் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது. விபத்தில் தலையில் அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விட்டான். மூளைச்சாவு ஏற்பட்டத்தால் இதயத்துடிப்பு இருந்தாலும் இறந்துவிட்ட நிலை. இனி உயிர் பிழைக்கவோ குணமாகவோ வாய்ப்பே இல்லை எனும் நிலைமை.

பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள். உடற்கூறு பற்றி நன்கு அறிந்தவர்கள், இனி பிழைக்கவே இயலாத தன் மகனின் உறுப்புக்களாவது பிறருக்குப் பயன்படட்டும் என நினைத்தவர்கள், பெருந்தன்மையுடன் உறுப்பு தானத்திற்குச் சம்மதித்தனர். துடித்துக் கொண்டிருந்த இதயம் அகற்றப்பட்டு, மணிக்கு 120 கி.மீ வேகத்தில் கொண்டு செல்லப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிறுமிக்குப் பொருத்தப்பட்டது. அதுபோலவே பிற உறுப்புகளும் தானம் செய்யப்பட்டன.

இதே போன்று கார்டூனிஸ்ட் மதனின் சகோதரர் முரளி இறந்துவிட, அவரது உடல் உறுப்புக்களும் குடும்பத்தாரால் தானம் செய்யப்பட்டுள்ளன. உயிரிழப்பின் சோகம் ஒருபுறம் வருத்தினாலும், மக்களிடையே தோன்றியிருக்கும் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்ச்சி புதிய நம்பிக்கையைத் தருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com