கின்னஸில் நுழைந்த ராமகிருஷ்ணன்
கேரளாவைச் சேர்ந்தவர் ஜி.ராமகிருஷ்ணன். மிருதங்க வித்வான். இவர் 2005-ல் தொடர்ந்து 101 மணி நேரம் மிருதங்கம் வாசித்து உலக சாதனை ஏற்படுத்தினார். கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார். இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்த அந்தச் சாதனையை தற்போது தானே முறியடித்திருக்கிறார். கோவையை அடுத்த நேரு ஏரோநாட்டிகல் கல்லூரியில் ஆகஸ்ட் 1, 2008 அன்று காலை 10 மணிக்கு தொடர் மிருதங்க வாசிப்பைத் தொடங்கிய ராமகிருஷ்ணன், 13ஆம் தேதி இரவு 11 மணிவரை தொடர்ந்து 13 நாட்கள் இரவு, பகலாக இடைவிடாமல் மிருதங்கம் வாசித்து, 301 மணி நேரத்தைக் கடந்து, தனது முந்தைய சாதனையை முறியடித்தார். உலகத்திலேயே முதன்முதலாக ஒரு இசைக்கருவியை 300 மணி நேரங்களுக்கு மேல் வாசித்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குழல்மன்னம் என்ற கிராமத்தில் எளிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன். தந்தை கோபாலகிருஷ்ண ஐயரிடம் இசையை முறைப்படி கற்றுக் கொண்ட இவர், 10 வயதில் செம்பை கிராமத்தில் மேடையேறினார். கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக ஏறத்தாழ ஐயாயிரம் மேடைக் கச்சேரிகளில் வாசித்துள்ளார். சாதனையாளரை வாழ்த்துகிறது தென்றல்.

அரவிந்த்

© TamilOnline.com