ஜெயலலிதாவின் மீது உரிமைமீறல் பிரச்சனை!
தமிழக சட்டப்பேரவையில், சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாம தீர்மானம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அ.தி.மு.க உறுப்பினருமான தம்பித்துரை கொண்டு வந்தார். சட்டப்பேரவை தலைவர் மீதான நம்பிக்கை யில்லா தீர்மானத்தை அன்றே பேரவையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஏதுவாக பேரவைத் தலைவரை நீக்குமாறு கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு 16 நாட்கள் முன்னறிவிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும் என்றும் அவை முன்னவரும் அமைச்சருமான அன்பழகன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இத்தீர்மானம் அன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றபட்டது. இத்தீர்மானத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.`

பின்பு அன்றே பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் செய்யப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தின் மீது தங்களுக்கு பேச அனுமதி வழங்கப் படவில்லை என்ற கூறி அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கை யில்லா தீர்மானத்தின் மீது குரல் ஒட்டெடுப்பு எடுக்கப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்காததால் அத்தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அன்றைய சபையை நடத்த அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் மரபு மீறல்கள், சட்ட அத்துமீறல்கள் நடைபெறுவ தாகவும், அதற்கு சட்டரீதியாக விரைவில் முடிவு கட்ட இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார், ஜெயலலிதாவின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, பேரவைத் தலைவரை தாறுமாறாக விமர்சிப்பது உரிமை மீறிய செயலாகும் என்று பதில் அறிக்கை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் சட்டப்பேரவையில், சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கையை விமர்சித்ததற் காக ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு, அதனை உரிமைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பினார் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com