'ழ' என்ற எழுத்து தமிழ்மொழிக்கு கிடைத்த சிறப்பு
நாம் அனைவரும் தமிழை முதலில் சுத்தமாகப் பேச வேண்டும். ழ என்ற எழுத்து தமிழ்மொழிக்குக் கிடைத்த சிறப்பு. இதை நாம் அனைவரும் தெளிவாக உச்சரிக்க வேண்டும். நாம் நமது மொழியைக் காப்பாற்றுகிறோம் என்பதற்காக மற்ற மொழிகள் மீது வெறுப்புக் காட்டக்கூடாது. நம்மை ஆட்சி செய்த மேலை நாட்டவரின் உடையை அணிந்து கொண்டு தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதில் என்ன பயன் உள்ளது. நமது மொழியின் பெருமை மற்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் அனைத்து மொழிகளையும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் உள்ள சிறப்புகளைத் தெரிந்து கொண்டால்தான் நமது தாய்மொழிச் சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

ஜெயகாந்தன்

***


சிறுபான்மையினர் நலனுக்காகப் பாடுபடுவதால்தான் எங்கள் ஆட்சியைக் கூட சிறுபான்மை ஆட்சி என்கிறார்கள்.

மு. கருணாநிதி

***


திராவிடக் கட்சிகளுக்கு உழைத்து, உழைத்து காங்கிரஸ் தொண்டர்கள் ஓய்ந்து போய்விட்டார்கள்.

ப.சிதம்பரம்

***


தமிழகத்தில் தற்போது காமராஜர் ஆட்சி நடப்பதாக காங்கிரசார் கூறுவது கேவலம்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர்

***


அரசு தொடர்ந்து மது விற்பனையை அதிகப்படுத்தி வந்தால் தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதிலாக குடிகார நாடு என்ற அவப்பெயர் உருவாகும் நிலை ஏற்பட்டு விடும்.

ராமதாஸ்

***


உலகில் அனைத்து நாடுகளிலும் உயர் கல்வி, பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்களின் தரம் குறைவாக உள்ளது. ஆய்வுகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளை பல்கலையாக மாற்றுவது அவசரத் தேவை. உலகில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த எண்ணிக்கையை உயர்த்தவில்லை யென்றால், உயர்கல்வியில் பின்தங்கும் நிலை உருவாகும்.

டாக்டர். வா.செ.குழந்தைசாமி

***


முதல்வர் கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குழம்புக்கு ரூ.99 செலவாகிறதே! கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இந்த அறிவிப்பு பலன் தராது.

டபிள்யூ. ஆர். வரதராஜன்

***


மக்களுக்காகக் கட்சி தொடங்கியுள்ள என்னைப் போன்றவர்களைப் பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பதாகக் கூறும் கருணாநிதி, முழுநேர அரசியல் மற்றும் முதல்வர் பணியைச் செய்கிறாரா எனும் சந்தேகம் மக்கள் மனதில் உருவாகியுள்ளது. படங்களுக்கு வசனம் எழுதுவது, கவிதை புனைதல், அரசு கேபிள் டி.வி.யைப் பரவலாக்கித் தனக்கு வேண்டாத சுமங்கலி டிவியை ஒழித்து விடுவதற்கான முயற்சி ஆகியவற்றிற்குச் செலவிடும் நேரம் போக, மீதி நேரத்தில் தான் அரசுப்பணிகள் கவனிக்கப்படுகின்றன என்பது தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும்.

சரத்குமார்

***


எனக்கும் மக்களிடம் செல்வாக்கு உள்ளது. விஜயகாந்த் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக நானும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

வடிவேலு, நடிகர்

***


வடிவேலு மட்டுமல்ல, என்னை எதிர்த்து முதல்வர் கருணாநிதியே போட்டியிட்டாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

விஜயகாந்த்

அரவிந்த்

© TamilOnline.com