ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 19, 2008 அன்று ஸ்ரேயா ராமச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் மெக்கஃபி சென்டர் சாரடோகா உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. மேகரஞ்சனி ராக புஷ்பாஞ்சலியுடன் விழா துவங்கியது. அடுத்து வந்த அமிர்தவர்ஷனி ராக 'விக்னராஜம் பஜே' என்னும் கணேச துதிக்கு அழகாக அபிநயம் பிடித்தார் ஸ்ரேயா. தொடர்ந்த ஜதிஸ்வரம், வர்ணம் வெகு சிறப்பு. நந்தனார் சரித்திரம், ராவணன் கதை, அர்த்தநாரீஸ்வரர் கதை என அனைத்தையும் அநாயசமாக ஆடிப்பார்வையாளர்களை பிரமிக்க வைத்தார் ஸ்ரேயா. குறிப்பாக நந்தியை விலகி இருக்கச் சொல்லும் நந்தனாரின் பாடலும் அதற்கான பக்கவாத்தியமும் வெகு அருமை. தனம்ஜயனின் மிருதங்கமும், முரளி பார்த்தசாரதியின் வாய்ப்பாட்டும் வெகு அற்புதம். குறிப்பாக பாலகிருஷ்ணனின் நட்டுவாங்கம் மிகச் சிறப்பாக இருந்தது. மதுரையில் நடந்த மீனாட்சி கல்யாணம், ராவணனின் கர்வத்தைப் போக்கியது என ஒவ்வொன்றையும் அனுபவித்து அவர் விவரித்த விதம் பிரமாதம்.

ராகமாலிகா ராகத்தில் அமைந்த பாரதியின் ‘யாதுமாகி நின்றாய் காளி', பின்னர் 'அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்' ஆகியவற்றுக்கு வெகு அழகாக ஆடினாள். ஸ்ரீ புரந்தரதாஸரின் சிந்துபைரவி ராகக் கிருதிக்கு அவர் ஆடிய விதம் அசர வைத்தது. இறுதியாக தில்லானா (மிஸ்ர சிவரஞ்சனி) முருகனைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்திருந்தது.

ஸ்ரேயா ராமச்சந்திரன் நான்கு வயது முதலேயே குரு விஷால் ரமணியின் ஸ்ரீ க்ருபா நடனக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவ்விழாவுக்காக வந்திருந்த பாடகர்கள் முரளி பார்த்தசாரதி, தனம்ஜயன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்), பாலகிருஷ்ணன் (நட்டுவாங்கம்) என அனைவரும் சிறப்பாகத் துணை நின்றனர்.

சந்தான லஷ்மி

© TamilOnline.com