வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 16, 2008 அன்று ஸ்ரீக்ருபாவின் 99வது அரங்கேற்ற மாணவியான வருணிகா ராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் நடந்தது. ஹம்ஸத்வனி புஷ்பாஞ்சலி, நாட்டையில் 'ஜயஜய ஸ்வாமின்' எனத் தொடங்கும் கணேச அஞ்சலி, கண்டமட்ய தாளத்தில் அமைந்த அமிர்தவர்ஷிணி ராக ஜதிஸ்வரம், வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா வர்ணம், தயானந்த ஸரஸ்வதியின் ரேவதி ராக 'போ சம்போ', ராகமாலிகையில் அகஸ்தியரின் 'ஸ்ரீசக்ரராஜ ஸிம்ஹானேஸ்வரி', பெரியசாமி தூரனின் காவடிச்சிந்து, மதுரை கிருஷ்ணனின் பிருந்தாவன ஸாரங்கா ராகத் தில்லானா என ஒவ்வொரு உருப்படியும் எது எதைவிட ஒருபடி மேல் என்று சொல்லமுடியாத அளவுக்கு அற்தமாக அமைந்திருந்தது. குறிப்பாக சண்முகப்ரியா வர்ணத்தில் அமைந்த ஜதிக்கோர்வை பிரமாதம். அழகு தெய்வமாக வந்து என்கிற காவடிச்சிந்தில் துள்ளலான ஆட்டத்துடன், கிராமிய மணமும் கமழ்ந்தது. வருணிகாவின் புரிதலுடன் கூடிய ஆடுதல், அழகான, அளவான பாவநேர்த்தி, தாள கச்சிதம் ஆகியவை அவரது நாட்டிய எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறுகிறது.

பாலகிருஷ்ணன் நட்டுவாங்கம், முரளி பார்த்தசாரதி பாட்டு, தனம்ஜயன் மிருதங்கம், வீரமணி வயலின் என அனைத்துமே மிகச் சிறப்பு. ஸ்ரீக்ருபாவின் அரங்கேற்றங்களில் இவர்களும் ஒரு ஸ்பெஷல் என்பது குறிப்பிடத்தக்கது. குரு விஷால் ரமணி ஒரு தேர்ந்த ஆசிரியை என்பது அவரது ஒவ்வொரு மாணவியின் நடன அரங்கேற்றத்திலும் நிதர்சனமாகத் தெரிகிறது. அவரது அசாத்திய உழைப்பும், மாணவிகளுக்கும் அவருக்கும் இடையேயான கண்டிப்பும் அன்பும் கலந்த குரு-சிஷ்ய பாவமும் பாராட்டத்தகுந்தவை.

ஷோபனா சுஜித்குமார்

© TamilOnline.com