க்ரியா வழங்கிய 'கடவுளின் கண்கள்'
நாடக விமர்சனம்:

தீபா ராமானுஜத்தின் இயக்கத்தில், க்ரியா க்ரியேஷன்ஸ் குழுவினர் கடந்த ஆண்டுகளில் அரங்கேற்றிய ஸ்ருதிபேதம், தனிமை, மாயா போன்ற நாடகங்கள் வளைகுடாப் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. நாடகங்களுக்கே உரிய திருப்பங்களுடன் அமைந்த கதை, கலகலப்பான வசனங்கள், கர்நாடக சங்கீத இசை போன்ற அம்சங்களுடன் இதுவரை வழங்கிய க்ரியா குழுவினர், இந்தமுறை கனமான வசனங்களுடன் மனித உணர்வுகளின் ஆழ்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான காட்சிகள் அமைந்த 'கடவுளின் கண்கள்' என்ற வித்தியாசமான மேடை நாடகத்தை அரங்கேற்றினர்.

சமூகத்தில் அந்தஸ்த்துடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான கண் மருத்துவரின் வாழ்வில் திடீரெனச் சூறாவளி வீசுகிறது. அன்பான மனைவி இருக்கும்பொழுது, தனது ரசனைகளுடன் இசைந்த ஒரு பெண்ணின் நட்பு விபரீதமான உறவாக மாறி அவரது நிம்மதியைக் குலைக்கிறது. மனரீதியில் பாதிக்கப்பட்ட, பன்முக ஆளுமை கொண்ட அந்தப் பெண்ணுடனான உறவு தனது குடும்ப வாழ்வுக்கும் கவுரவத்துக்கும் உலை வைக்கும் என்பதை உணர்ந்த டாக்டர், தன்னையே உணராமல் எடுத்துவிடும் ஒரு நடவடிக்கையால் ஆபத்தான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். சிக்கல்களையும், குற்ற உணர்வுகளையும் டாக்டர் எப்படிக் கடந்து மீள்கிறார் என்பதை நாடகம் காட்டுகிறது.

ஒரு நீரோடை போல வெகு அமைதியாக ஆனால் அழுத்தமான, வெகு யதார்த்தமாக காட்சிகளால் நாடகம் நகர்த்தப் பெறுகிறது. இதேபோன்ற கதை அமைப்பு உடைய புதிய பறவை போன்ற திரைப்படங்களில் காணப்படும் அதீத உணர்ச்சிப் பிரவாகங்களுடன் கூடிய மிகைப்பட்ட நடிப்பு இல்லாமல் இயல்பாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூர்மையான, தர்க்கரீதியான வசனம் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கிறது. பாத்திரங்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மெதுவாக நகரும் மேடை நாடகங்கள் தமிழ் நாடக ரசிகர்களுக்குச் சற்றே புதிதாகையால் ஒரு கலைப்படத்தைப் பார்க்கும் குழப்பத்துடனேயே இதை வரவேற்றார்கள் எனலாம். நாடகத்தனமான திருப்பம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு முடிவு ஏமாற்றத்தை அளித்திருக்கும். பலரும் நாடகம் முடிந்ததையே உணரவில்லை.

மனித மனங்களைப் படம் பிடிக்கும் ஒரு கதையைத் துணிவுடன் அரங்கேற்றியுள்ளனர் க்ரியா குழுவினர். TAR (ராமானுஜம்) கதை வசனத்தை எழுதியுள்ளார். தீபா ராமானுஜம் நாடகத்தை இயக்கியதுடன், பிளவாளுமை உடைய (ஸ்பிலிட் பெர்சனாலிடி) தேவியின் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார். நடிகர்கள் அனைவரும் வெகு இயல்பாக நடித்திருந்தினர். வழக்கம் போலவே க்ரியா குழுவினர் மேடை அமைப்புகளையும், ஒலி ஒளி
அமைப்புகளையும் நன்றாகச் செய்திருந்தனர். ஓவியத்தை சங்கீதத்துடன் ஒப்பிடும் இடத்திலும், இந்துக் கடவுள்கள் மிருகங்கள் மேல் அமர்ந்திருப்பதன் குறியீடும், வாழ்க்கையில் அதீதமான தவறுகள் கூட சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்டு மறந்து போய்விடும் யதார்த்ததைக் காட்டும் இடத்திலும் வசனங்கள் நன்றாக அமைந்திருந்தன. சென்னைய இசையமைப்பாளர் கிரிராஜ் பொருத்தமாக இசையமைத்திருந்தார்.

வித்தியாசமாகச் சிந்தித்த க்ரியா குழுவினருக்குப் பாராட்டுக்கள். இதுபோன்ற நாடகங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு வளைகுடாப் பகுதி நாடகக் குழுக்கள் மேலும் கனமான கதைகளை மேடையேற்றம் செய்ய உற்சாகம் அளிக்கும்.

திருமலை ராஜன்

© TamilOnline.com