ஓடும் ரயிலில் அதிசயப் பிரசவம்
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் புரிபென். 33 வயதான இவர் எட்டு மாத கர்ப்பிணி. உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக மார்ச் மாதம் ஜோத்பூரில் இருந்து ஆமதாபாத் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். குஜராத் அம்பிலிசயான் ரயில் நிலையம் அருகே, ரயில் சென்று கொண்டிருந்த போது, புரிபென் பாத்ரூம் சென்றார். திடீரென மயக்கம் அடைந்து விட்டார். ஓடும் ரயிலின் கழிப்பறையிலேயே அவருக்குப் பிரசவமாகி விட்டது. அவர் மயக்கமாக இருந்ததால் குழந்தை பிறந்ததை அவரால் உணர முடியவில்லை. அதே சமயம் குறை மாதத்தில் பிறந்த அந்தக் குழந்தை கழிப்பறைத் துவாரம் வழியாக, தண்டவாளத்தில் விழுந்து விட்டது.

வெகுநேரம் ஆகியும் புரிபென் பாத்ரூமில் இருந்து வெளியே வராததால் கழிப்பறைக் கதவு உடைத்துத் திறக்ககப்பட்டது. அங்கே புரிபென் மயக்கமாக இருந்ததும், குழந்தை பிறந்து கீழே விழுந்து விட்டதும் தெரிய வந்தது. உடன் ரயில்வே ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. இதற்குள் ரயில் பல கி.மீ. தூரத்தைக் கடந்து விட்டிருந்தது. ஊழியர்கள் அரைகுறை நம்பிக்கையுடன் தண்டவாளப் பாதைகளில், தேட, அந்தக் குறைமாதப் பெண் குழந்தை, எந்த பாதிப்புமின்றி, ரயில்வே தண்ட வாளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

அரவிந்த்

-

© TamilOnline.com