தமிழ்விழா 2008 - Fetna
2008 ஜூலை 4 முதல் 6 வரை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 'தமிழ் விழா 2008'ஐ ஒர்லாண்டோ (புளோ.) நகரிலுள்ள பாப் கார் அரங்கத்தில் கொண்டாட இருக்கிறது. இது தமிழிசைப்பேரறிஞர் பெரியசாமி தூரன் அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் அமையும்.

கடந்த 20 ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ் விழாவின் மூலம் தமிழ்மொழி மற்றும் தமிழரின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர்கள், அறிஞர்கள், திரைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமூக சேவைப் பிரமுகர்கள் மற்றும் பல பிரபலங்கள் வரவழைக்கப்படுவார்கள். விழாவில் இடம்பெறும் கவியரங்கம், பட்டிமன்றம், இசை, நாடகம் ஆகிய அனைத்தும் வந்தோருக்கு விருந்தாக அமையும். விழாவில் விளிம்புநிலை மனிதர், நலிவுற்ற கலைஞர், அவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் ஆகியோரையும் கெளரவிப்பர்.

முந்தைய ஆண்டுகளில் கலைஞர் திரு நங்கை நர்த்தகி நடராஜ் நடன நிகழ்ச்சி அளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் பாரம்பரியக் கலையைச் சொல்லும் விதமாக 'நந்தன் கதை'யை மேடையேற்றியதும் உண்டு. தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் வளர்க்கும் 'தாய் தமிழ்ப் பள்ளிகளை' வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த பெருமையும் பேரவைக்கு உண்டு. இந்த ஆண்டும் பல தமிழ்நாட்டுப் பிரபலங்கள் தமிழ் விழாவை அலங்கரிக்க வருகிறார்கள். சுற்றலாத்துறைச் செயலர் முனைவர் இறையன்பு, பேரா. சுப. வீர பாண்டியன், ஒளிμவியர் இயக்குனர் தங்கர்பச்சான், இயக்குனர் சீமான், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் சி. சுப்ரமணியன், தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் நக்கீரன், வேலூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன், சன் தொலைக்காட்சிப் புகழ் ஈரோடு மகேஷ், 'ஆணிவேர்', 'மௌனம் பேசியதே' படங்கள் புகழ் நடிகர் நந்தா, கலைமாமணி சுதா ரகுநாதன் என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மேலும் ஆழியாறு சித்தர் யோக மையத்தின் யோகப் பயிற்சிப் பட்டறை, இன்பிட் மற்றும் தமிழ்மணம் (www.infitt.org, www.thamizmanam.com) இணைந்து வழங்கும் தமிழ்இணையம்/வலைப்பதிவாளர் பயிற்சிப்பட்டறை, http://www.tamilmatrimony.com வழங்கும் திருமண மண்டபம், NTYO, TYO வழங்கும் இளைஞர் சந்திப்பு, முன்னாள் மாணவர் சந்திப்பு, தொழில்முனைவோர் அரங்கு தவிர பல தமிழ்ச்சங்கங்கள் வழங்கும் கலைநிகழ்ச்சி களும் நடைபெறவுள்ளன.

கோ. வேள்நம்பியின் தலைமையில் 'தாயே, தமிழே! வருங்காலம் நின் காலம்' கவியரங்கம், ஈரோடு மகேஷ் தலைமையில் 'இனி, தமிழ் வளர்வது, தாய்த்தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?” பட்டிமன்றம் ஆகியவை நடைபெறும்.

மதுரையைச் சேர்ந்த இசை அறிஞர் நாகூர்மைதீன் மம்மது அவர்களின் தலைமை யில் 'பழந்தமிழர் இசை' விளக்க நிகழ்ச்சி முதன்முறையாக அமெரிக்க மண்ணில் அரங்கேறவுள்ளது. மம்மது (www.tamilinnisai.org) அவர்கள் தமிழிசைப் பேரறிஞர் வி.ப.க. சுந்தரம் அவர்களின் மாணவர். இவர் தமிழிசைப் பேரகராதி எனும் பெரும் பணியை தமிழறிஞர் பலருடன் செய்து வருகிறார்.

ஞாயிறு காலை 9 முதல் மதியம் 1 மணிவரை இலக்கியக் கருத்தரங்கம் நடைபெறும். '20ம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை, நாடக (கூத்து) மறுமலர்ச்சி' என்கிற தலைப்பில் வே. இறையன்பு, சுப. வீரபாண்டியன், தங்கர் பச்சான், ஈரோடு மகேஷ், முனைவர் சுப்பிரமணியம், முனைவர் நக்கீரன், மம்மது ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:
www.fetna.org
தொடர்புகொள்ள:
சி. சுப்பிரமணியம் - 954.675.6883
(ஒருங்கிணைப்பாளர்)
chrissubra@aol.com / treasurer@fetna.org
தில்லை க. குமரன் - 408.857.0181
thillai@sbcglobal.net / president@fetna.org

© TamilOnline.com