'புஷ்பாஞ்சலி'யின் பத்தாண்டு நிறைவு விழா
ஏப்ரல் 29, 2006 அன்று 'புஷ்பாஞ்சலி' நாட்டியக் கழகத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா சான் ஹோஸே CET அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இதன் நிறுவனர்-இயக்குனர் மீனா லோகன் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், முதல் பெண் நட்டுவனார் என்ற சிறப்பை அடைந்தவருமான கலைமாமணி கே.ஜே. சரஸா அவர்களின் சகோதரி மகள் ஆவார். தான் பயின்ற கலையைப் 'புஷ்பாஞ்சலி'யின் மூலம் பலருக்கும் கற்பித்து வருகிறார்.

சிறந்த உள்ளூர்க் கலைஞர்களான ஆஷா ரமேஷ், என். நாராயணன், சாந்தி நாராயணன், மீனாக்ஷி ஸ்ரீநிவாசன் ஆகியோரின் துணையோடு நடந்த இந்த நடன நிகழ்ச்சி இனிய அனுபவமாக அமைந்தது. பாடல்களின் தேர்வும், தொகுப்பும், தெளிவான அறிமுகக் குறிப்புகளும் நிகழ்ச்சிக்குக் களைசேர்த்தன.

கடவுள் வணக்கப் பாடலில் பங்கு பெற்ற இளஞ்சிறார் கண்ணுக்கு விருந்து. 'தோடுடைய செவியன்' (நாட்டை) என்ற புஷ்பாஞ்சலியில் நடன வேகமும், நட்டுவாங்கமும் மிகவும் எடுப்பு. தொடர்ந்து சிறுமியர் குழு அளித்த அலாரிப்பு வெகு அழகு.

அடுத்து வந்த வஸந்தா ராக ஜதிஸ்வரத்தில் நாட்டியக் கோர்வை மனதுக்கு மகிழ்வூட்டிற்று. உச்சக்கட்டமாக, குரு மீனா அவர்கள் தனித்து அளித்த நடனம் ஒரு குறுநாடகமாகவே திகழ்ந்தது. இராமாயணக் கதையை உள்ளடக்கிய ராகமாலிகா வர்ணத்திற்கு ஆடிய மீனாவின் வேகமும், அடவுத் திறனும் மிகவும் சிறப்பு.

இடைவேளைக்குப் பின்னர் வந்த 'மதுராஷ்டகம்' ராகமாலிகையில் கண்ணபிரானின் வசீகரமான தோற்றமும் கேளிக்கைகளும் தரும் ஈர்ப்பை மதுரமான இசையுடன் வழங்கினர். அடுத்து, ரேவதி ராகத்தில் அமைந்த 'மஹாதேவ சிவ சம்போ'வின் உருக்கமான இசையும் தெளிவான அபிநயங்களும் மாணவியரின் இசைவான நடனக் கோர்வைகளும் சேர்ந்து, பக்திச் சுவையின் பரவசத்தில் மெய்மறக்கச் செய்தன. இறுதியில் தேஷ் ராகத் தில்லானா விறுவிறுப்புடன் நறுக்கென்று இருந்தது. இதில் 'வந்தே மாதரம்' நாட்டுப்பண்ணை உள்ளீடாய்ச் சேர்த்திருந்தது நல்ல கற்பனை.

இரண்டு மணி நேரத்தில் ஐம்பது மாணவ, மாணவியரை மேடையேற்றி, காண்போருக்குச் சலிப்புத் தட்டாமல் மகிழ்வித்தது பாராட்டுக்குரிய செயல்.

மு. ச. கிருட்டினன்

© TamilOnline.com