மணலில் எழுதிய எழுத்து
அன்று திலக்பிரசாத் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந் தான். அவனது மனைவி புவனா 'நிக்கிக்கு லெக்ஸஸ் IS கார் வாங்க டீலர் கிட்டப் போய் பேப்பரெல்லாம் ரெடி பண்ணியாச்சு. நீங்களும் கையெழுத்து போடணும். இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்குப் போகணும்' என்றாள். திலக்குக்குத் தூக்கி வாரிப் போட்டது. 'இதென்ன, ஒரு 17 வயதுப் பள்ளி மாணவிக்கு 67,000 டாலர் காரா!' என்று கேட்டான். 'ஆமாம், நீங்கதான் கஞ்சத்தனமா, நம்மளுக்கு ஏத்தாப் போல ஒரு கார் ஓட்டல. நம் பெண்ணாவது வாங்கறாளே, அவள் அதுகூட ஓட்டலைன்னா அவளோட மானம் போயிடுமாம்' என்றாள்.

'புவனா, பண விஷயத்தில் கொஞ்சம் பெண்ணை கெட்டியாப் பிடிக்க வேண்டும். இல்லேன்னா, வாழ்க்கையில் கேட்ட தெல்லாம் கிடைக்கணும்னு எதிர்பார்ப்பா. கிடைக்காதபோது அவளால் அந்த ஏமாற்றத் தைத் தாங்க முடியாது' என்றான். என்ன சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அவன் ஒரு முக்கியமான 8 மணி மீட்டிங் குக்குச் செல்ல யத்தனித்தான்.

காரில் போகும்போது அவனது கடந்த காலம் மனக்கண்ணில் விரிந்தது...

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு பொந்து வீட்டில் வாழ்ந்ததும், படிப்பெல்லாம் உதவித்தொகையில் படித்ததும் நினவு வந்தது. திலக்கிற்குப் பணக்கஷ்டமே தவிர, நல்ல உயரமாக ஆஜானுபாகுவாக இருப்பான். அவனது நண்பர்கள் வீட்டிலிருந்து கட்டுச் சாப்பாடு வரும். இவனுடையதோ தயிர் சாதமும் ஊறுகாயும்தான். நல்ல நண்பர்கள் இருவரும் மறுத்தாலும் அவனுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள். அவனது நண்பர்கள், அவனது தயிர் சாதத்துடன் சேர்த்து மூன்று கோர்ஸ் சாப்பாடாக மதியம் சாப்பிடுவார்கள்.

அவன் வீட்டிலோ தரித்திரம் தாண்டவ மாடியது. அவன் உதவித் தொகையில் பொறியாளராகப் படித்தான். அவனது இன்னொரு நண்பன் சங்கர் இவனை விடச் சற்று வசதியானவன். அவன் சங்கருக்கு அடுத்த தெருவில் இருந்தான். பரிட்சை நேரத்தில் சங்கர் அவனைத் தொந்தரவு பண்ணி தன்னோடு ஒன்றாகப் படிக்கச் சொல்வான். அப்படிப் போகும்போது சங்கரின் தங்கை புவனாவைப் பார்த்திருக் கிறான். அவள் காபி கொடுக்க வந்து செல்லும்போது ஒரு சின்னச் சிரிப்பு. அவ்வளவுதான். அவன், நாளாக நாளாக அவளைப்பற்றி நினைக்க ஆரம்பித்தான். அவள் கொலுசுச் சத்தம்கூட இன்னிசையாக இருந்தது.

அவள் தன்னிடம் பேசமாட்டாளா எனத் தவம் கிடந்தான். சுமாரான நிறம், சுமாரான அழகு, சுமாரானப் படிப்புதான். ஓஹோ என புத்திசாலியும் இல்லை. ஆனால் எந்நேரமும் பளிச்சென்ற முகம். திலக்கின் மனது அவள் வேலை செய்யும் போது பாடுபடும். அவளுடைய அம்மாவோ அவளுக்கு வீட்டு வேலை தெரியவில்லை என்று திட்டுவார். வீட்டு வேலகளை அவள் அம்மா நொச்சு நொச்சென்று வாங்கிக் கொண்டிருந்தாலும் உடைகள் வெகுசுத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவான். திலக்கின் தங்கைகளோ வேலை செய்தால், ஆடைகள் கசங்கி விடும்.

##Caption##ஒருநாள் அவள் முகம் வாடி இருந்தது. சங்கர் 'புவனா வாட்ச் கேட்டாளாம். அம்மா 6 மாசம் கழித்து வாங்கித் தருகிறேன் என்றாளாம். இப்போ இன்னும் ஆறு மாசம் போகட்டும் என்கிறாளாம். கேட்டதை யெல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டால் வாழ்க்கையில் தோல்விகளையோ ஏமாற்றங் களையோ தாங்கிக்கொள்ள முடியாது என்பது என் அம்மாவின் சிந்தாந்தம். காக்க வைப்பதில் எந்தத் தப்புமில்லை என்று அப்பாவிடம் கதாகாலட்சேபம் வேறு' என்று விளக்கினான்.

திலக் படித்தவுடன் ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கிடைத்து, பம்பாய் சென்றான். பிறகு சில கம்பெனிகள் மாறி, படிப்படியாக முன்னேறி, ஒரு சந்தர்ப்பத்தில் யு.எஸ். வந்து இரண்டு ஆண்டுகளில் சொந்தமாகத் தொழில் ஆரம்பித்துப் பெரிய ஆளாகி விட்டான். அவன் பழையதை மறக்காமல், மமதையில்லாமல் சாதாரணமாக மற்றவர் களிடம் பழகினான். அவன் படித்து முடித்து பம்பாய்க்குச் செல்வதற்கு முன்னால் அவன் புவனாவை இரண்டு வருடம் கழித்து மணம் புரியும் விருப்பத்தைத் தன் அம்மாவிடமும் சங்கரிடமும் தெரிவித்துச் சென்றான். சங்கர் அதைக் கேட்டு ஆனந்தப் பட்டான். புவனாவோ சாதாரணத்தில் ஒத்துக் கொள்ள வில்லை. நம்ம நிலைமையில்கூட திலக் குடும்பமில்லை. அங்கே ரொம்பக் கஷ்டம். போதாததற்கு, தங்கைகளுக்குக்கூடத் திலக் தான் கல்யாணம் செய்யவேண்டும். பிக்கல் பிடுங்கல் இல்லாத ஒரு பெரிய இடமாப் பார்க்கக் கூடாதா என சங்கரிடம் மனதைக் கொட்டிவிட்டாள். அவளது அம்மாவோ 'திலக் சாமர்த்தியமான பிள்ளை, படித்திருக்கிறான், பிழைத்துக் கொள்வான்' என்றாள்.

அரை மனதோடு புவனா சம்மதித்து ஆறு வருடங்களில் திலக் கடின உழைப்பால் உயர்ந்து விட்டான். புவனாவோ பணம் வந்தவுடன் அடியோடு மாறிவிட்டாள். அவளால் திலக் மாதிரி சாதாரணமாக இருக்க முடியவில்லை. ஆடம்பரம், படா டோபம், டம்பம் எல்லாம் மொத்தக் குத்தகை எடுத்து அவளிடம் டேரா போட்டுவிட்டன.

புவனா முந்தின நாள் பக்கத்து வீட்டு இந்தியப் பெண்மணியிடம் பேசியது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. அப் பெண்மணி 'புல்லுக்கு உரம் போட்டாச்சா?' என்று கேட்டாள். 'ஒரு பெரிய லாண்ட்ஸ் கேபிங் கம்பெனிக்கு விட்டாச்சு; இதெல்லாம் செய்யறதுக்குப் பதிலா கான்ட்ராக்ட் கொடுத்துடறது நல்லது. சனி ஞாயிறில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்குத்தான் உரம் போடுகிற வேலையெல்லாம் சரி' என்றாள். அப்பெண்மணியின் முகம் சுருங்கி விட்டது. ஏனெனில் அவள் வீட்டில் கணவர் தான் புல்லுக்கு உரம் போடுவது. இதில் புவனாவுக்கு ஒரு அல்பத் திருப்தி.

புவனாவை எப்படித் திருத்துவது என்று தெரியவில்லை. அவள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் சரியில்லை. பெண் நிக்கியோ படிப்பில் அக்கறையில்லாமல் காரில் சுற்றிக் கொண்டிருந்தாள். பையன் விஷாலோ பணக்கார கும்பலுடன் சுற்றினான். அவர்கள் படிப்பு சரியில்லை. திலக் பிஸினசில் மும்முரமாக இருந்தான். புவனாவிடம் எவ்வளவு சொல்லியும் அவள் 'படிப்பில்லைனா என்ன, உங்க பிஸினஸ் இருக்கே' என்றாள்.

நாலு வருடங்களுக்குப் பின்...

திலக் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தான். புவனா சில வேலைகளை கவனித்துவிட்டு மூன்று மணிக்குத் திரும்பினாள். நடந்து வாஷிங்டன் மெட்ரோ ரெட்லைன் ரயிலைப் பிடிக்கப் போகும் போது, நியூ ஹாம்ப்ஷயர் அவென்யூவுக்கும் மாஸசூஸட் அவென்யூவுக்கும் இடையே வித்தியாசமாக இருக்கும் செஸ் விளையாடு பவர்களைப் பார்த்தாள். எந்த ஊரிலும் இப்படி அவள் பார்த்ததில்லை. மதியம் மூன்று மணிக்கு நல்ல வேலை பார்ப்பவர்கள் கூட செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வேலையே கிடையாதா? பணம் வைத்து விளயாடுகிறார்களா? ரெட்லைன் ட்ரெயினைப் பிடித்து ஏறினாள். ஒரு ஜன்னலோரமாக உட்கார்ந்தாள். அவள் வீடு வெஸ்ட்·பால் சர்ச்சில் இருந்தது. அதற்கு மெட்ரோ சென்டரில் இறங்கி, ஆரஞ்சுலைன் ரயில் ஏறவேண்டும். பழைய புவனாவாக இருந்திருந்தால், வாஷிங்டனில் கிரிஸ்டல் சிடியில்தான் வீடு வாங்கி இருப்பாள்.

ஒருநாள் அவளிடம் திலக் வியாபார விஷயம் தெரிந்துகொள்ளக் கூப்பிட்டான். 'இதெல்லாம் எனக்குச் சரிப்படாது. ஒரு மேனேஜர் இருக்கான் இல்லே, நான் எதுக்கு? எனக்கு ஷாப்பிங்குக்கே நேரம் போதலை' என்று கூறி வெளியே சென்றுவிட்டாள். அன்றுதான் தலையில் இடிவிழும் செய்தி வந்தது. திலக் சென்ற காருடன் ஒரு பெரிய வாகனம் மோதிவிட்டது. அவனுக்குத் தலையில் பலத்த அடி. வியாபாரம் படுத்துவிட்டது. கஷ்டப் பட்டுச் சேர்த்த எல்லாம் கைவிட்டுப் போனது.

நிக்கிக்கும் விஷாலுக்கும் ஒரு விதமாக வாழ்க்கையின் நிஜம் புரிந்தது; படிப்பின் அருமையும் புரிந்தது. நிக்கி படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள். விஷால் செயின்ட் லூயிஸில் டாக்டருக்குப் படிக்க ஆரம்பித்திருந்தான். புவனா அடியோடு மாறிவிட்டாள். திலக் ஓராண்டுக்கு முன்தான் முழுதாக குணமாகி மீண்டும் வியாபாரம் தொடங்கி இருந்தான்.

அவள் கற்ற பாடம் - வாழ்க்கையின் செளகரியங்கள் நிரந்தரமானவை அல்ல. அவை மணலில் எழுதிய எழுத்துகள். ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளர் சொன்னது ஞாபகம் வந்தது: 'உறவுகளை நேசிப்போம், பொருட்களைப் பராமரிப்போம்; இதற்குப் பதிலாக, பலர் பொருட்களை நேசிக் கிறார்கள், உறவுகளைப் பராமரிக்கிறார்கள்.

உமா அருண், டெட்ராய்ட் மிச்சிகன்

© TamilOnline.com