பாபா ஆம்தே
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். அவருக்கு வயது 94. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளின் நலம் காக்கத் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதுடன், பல்வேறு சேவை அமைப்புகளையும் உருவாக்கி வழிநடத்தினார் ஆம்தே.

வழக்கறிஞராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கிய ஆம்தே, காந்தியக் கொள்கை களால் ஈர்க்கப்பட்டார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சமூக சேவகராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந் தார். 'சத்தியத்தின் வீரர்’ என்று மகாத்மா காந்தியடிகளால் பாராட்டப் பெற்ற ஆம்தே, தொழுநோயாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார். பாரத இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ’பாரத் ஜோடோ’ என்ற அமைப்பைத் துவங்குவதில் ஈடுபட்டிருந்த அவர், ரத்தப் புற்றுநோயால் காலமானார்.

அவர் மறைந்து விட்டாலும் அவரது சேவைக்குச் சான்றாக என்றும் இருக்கும், மகாராஷ்டிராவின் வரோராவில் அவர் உருவாக்கிய 'ஆனந்தவனம்' ஆசிரமம்.

அரவிந்த்

© TamilOnline.com