தபால்தலை கௌரவம்
சாதனையாளர்கள், விஞ்ஞானிகள், ஆன்மீகப் பெரியவர்கள், சீர்திருத்தவாதிகள் போன்றோரை கௌரவிக்க அவர்களின் உருவப்படம் அடங்கிய தபால்தலைகளை வெளியிட்டு சிறப்புச் செய்வது வழக்கம்தான். முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும், முக்கிய இடங்கள், விசேஷ சூழ்நிலைகளின் போதும் மத்திய அரசு ஞாபகார்த்தத் தபால்தலைகள் வெளியிடு வதும் உண்டு. ஆனால் தற்போது அரசு தனது இந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், திரைத்துறை சாதனையாளர்கள் ஆகியோரது தபால்தலையையும் வெளியிட அரசு உத்தேசித்துள்ளது.

முதற்கட்டமாக சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், சானியா மிர்ஸா, ஷாருக் கான், ரெமோ பெர்னாண்டஸ் ஆகியோரின் தபால்தலைகளை வெளியிட தபால்துறை யோசித்துக்கொண்டிருப்பதாக மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் அதிக அளவில் தபால் தலைகள் வாங்க முன்வருவர் என்றும், அதன் மூலம் தபால்தலைகளின் விற்பனை பெருகும் என்றும், மக்களிடையே தபால் தலை சேகரிக்கும் பழக்கமும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உண்மைதான்.

அரவிந்த்

© TamilOnline.com