சுதந்திர ரயில்
1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போரின் 150-வது ஆண்டு விழா, இந்தியா சுதந்திரம் அடைந்த 60-வது ஆண்டு நிறைவு விழா, பகத்சிங் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழாக்களின் தொடக்கத்தினையொட்டி சுதந்திர எக்ஸ்பிரஸ் என்றொரு ரயிலை இரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள், அவர்களது வாழ்க்கை வரலாறுகள், புகைப் படங்கள், கையெழுத்துப் பிரதிகள் எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய இந்த ரயில் பெட்டிகள் நாடு முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

சுதந்திரப் போராட்டம் பற்றிய கண்காட்சியான இந்த ரயில் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டது. சுமார் ஒன்பது மாத காலத்தில் 21 மாநிலங்களுக்குச் சென்று வந்த இந்த ரயில் தமிழகத்திற்கும் வருகை தந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியரை ஆங்கிலேய அரசு நிர்வாணமாக ஆக்கிக் கொடுமைப்படுத்திய காட்சி, காந்திஜியின் உப்பு சத்யாகிரகம் போன்ற பல நிகழ்வுகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன. வ.உ.சி., வாஞ்சிநாதன், ராஜாஜி, காமராஜர், முத்து ராமலிங்கத் தேவர், பக்தவத்சலம் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்களின் படங்களும், ஓவியங்களும் கூட இடம் பெற்றுள்ளன. அடுத்து கர்நாடகா செல்ல இருக்கும் இந்த இரயில் மே 11 வரை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. சுதந்திரப் பொன்விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் இந்த நகரும் கண்காட்சி பொருத்தமே.

அரவிந்த்

© TamilOnline.com