தானாக ஓடிய சரக்கு ரயில்
உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் நான்கு காலி கன்டெய்னர் பெட்டிகள் இருந்தன. டிரைவர், கார்டு என வண்டியில் யாருமே இல்லாத நிலையில், சரக்கு வண்டி திடீரெனத் தானாக நகர ஆரம்பித்தது. மெல்ல நகர்ந்த அந்த ரயில், பின்னர் யாரோ ஓட்டிச் செல்வது போல் மிக வேகமாக ஓட ஆரம்பிக்க, பெரும் அமளியாகி விட்டது. ரயிலை நிறுத்த ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. அதிவேக விரைவு வண்டிகள் அந்தப் பாதையில்தான் வரும் என்பதால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. விரைவு வண்டிகள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மீரட்டை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலை, அடுத்துள்ள குல்தர் ரயில் நிலையத்தில் நிறுத்த ஏற்பாடு செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ரயில்வே பணியாளர்கள் ஓம் பிரகாஷ் மற்றும் ராகுல் சகஹால் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடும் வண்டியில் தாவி ஏறி, வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினர். ஒரு பெரிய விபத்து கடுமையான போராட்டத்துக்குப் பின் தவிர்க்கப்பட்டது. என்றாலும், ரயில் தானாக பத்து கிலோ மீட்டர் தூரம் எப்படி ஓடியது என்பதற்கான காரணத்தை யாராலும் கண்டறிய இயலவில்லை. ரயில்வே நிர்வாகம் வழக்கம் போல விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com