பூஜா, பரத் சங்கர் கீபோர்ட் அரங்கேற்றம்
நவம்பர் 3, 2007 அன்று சிறார்கள் பூஜா, பரத் சங்கர் இவர்களின் கீபோர்டு அரங்கேற்றம் தௌஸண்ட் ஓக்ஸ் சிவிக் ஆர்ட் பிளாஸாவில் நடைபெற்றது.

சங்கர், லதா தம்பதிகளின் மக்களான இவ்விருவரும் பிரமாதமாக இந்த இசைக் கருவியைக் கையாண்டு, பெற்றவர்களுக்கும் குரு முரளி கிருஷ்ணாவுக்கும் பெருமை தேடிக் கொடுத்தார்கள்.

ஆபோகி வர்ணம் ஆரம்பித்தவுடனேயே களை கட்டிவிட்டது. அடுத்து ஹம்சத்வனியில் வாதாபி கணபதிம். அதற்கு கல்பனா ஸ்வரங்களை இசைத்துக் கேட்பவர்களை பிரமிக்க வைத்தார்கள். ஸ்ரீதியாகராஜரின் ஸ்ரீராக பஞ்சரத்ன கிருதியை வெகு லாவகமாக கையாண்டது ரொம்பவும் இனிமை. 'பண்டு ரீதிகொலுவு' ஹம்சநாத கீர்த்தனை மனதைத் தொடும்படியாக அமைந்தது. மிகவும் கடினமான ஸ்வர ஜதியோடு ஸ்ரீசியாமா சாஸ்திரி பைரவி ராகத்தில் இயற்றியதை மிகவும் சுலபமாகக் கையாண்டு மலைக்க வைத்தனர். அடுத்தபடி விறுவிறுப்பான ரவிசந்திரிகா கிருதி சுகமாக இருந்தது. 'சக்கனி ராஜா' கீர்த்தனத்தில், ராகத்தை அழகாக விஸ்தரித்து அதற்கு கல்பனா ஸ்வரங்களும் போட்டு... பெரிய வித்வான்கள் கெட்டார்கள் போங்கள்!

பட்டணம் சுப்ரமணிய அய்யரின் 'ரகுவம்ச சுதா' கேட்டவர்களை ஆகாயத்தில் சஞ்சரிக்க வைத்தது. முன்னர் வாசித்தராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை' ராகமாலிகை எந்தவிதக் குறையுமில்லாமல் இருந்தது. பாபநாசன் சிவனின் 'என்ன தவம் செய்தனை' அருமை. 'தனாஸ்ரீ' தில்லானா சம்பூர்ணமாக வித்தை கற்றிருப்பதைப் புரிய வைத்தது. மங்களத் துடன் முடிந்த இந்த அரங்கேற்றம் பெரிய கச்சேரியைக் கேட்ட அனுபவத்தை ஏற்படுத்தியது.

வைத்யநாதனின் தனி மிருதங்க ஆவர்த் தனமும், விட்டல் ராமமூர்த்தியின் வயலினும் அரங்கேற்றத்தைச் சிறக்க வைத்தன. இவர்கள் சிறுவர்களின் சங்கீதத்தை அனுபவித்து, இடையிடையே கைதட்டி உற்சாகப்படுத்தியது சபையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

குரு முரளி கிருஷ்ணாவின் முடிவுரையும், சங்கரின் உறவினர் ஸ்ரீதர் சிட்டியால என்பவரின் தாய்மொழி தெலுங்கானபடியால் ரொம்பவும் அழகாகப் பொருள் சொல்லிக் குழந்தைகளைப் பாராட்டியதும் நிறைவாக இருந்தன.

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com