நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் கலைவிழா 2007
நவம்பர் 17, 2007 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் கலைவிழாவை ·ப்ராமிங்கனில் நடத்தியது. 'கலைவிழா 2007' முத்தமிழ் விழாவாக மலர்ந்தது. உமா நெல்லையப்பன் விழாவைத் தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து ராம் ரமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

பாஸ்டன் மோகன் சோமசுந்தரம் அவர்களின் 'சப்தஸ்வர்' குழுவினர் இன்னிசை மழை பொழிந்தார்கள். சுதா அவர்கள் திருக்குறளையும் பாரதிதாசனின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடலையும் பாடி மெல்லிசை மாலையைத் தொடங்கினார். 'மாசிலா உண்மைக் காதலே' முதல் இன்றைய ரீமிக்ஸ் வரையான பாடல் தேர்வுகள் அனைவரையும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது. பார்வையாளர்களைச் சேர்ந்து பாடச் சொல்லியும், சிறுவர்களை ஆடச்சொல்லியும் மகிழ்வித்தார்கள்.

சங்கத்தின் தலைவர் பாலாஜி சந்தானம் 'சப்தஸ்வர்' இசைக்குழுவினரைப் பாராட்டிப் பேசினார். மேலும் சங்கத்தின் நிகழ்வுகளை எடுத்துரைத்து இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றியுரைத்தார்.

கலைவிழாவின் இறுதியாக 'சிரிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்' நகைச்சுவை நாடகத்தை வழங்கினார்கள் கனடாவின் டொராண்டோ வைச் சேர்ந்த 'மிஸிஸாகா கிரியேஷன்ஸ்'. வித்யா கல்யாணராமன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.

பூங்கோதை கோவிந்தராஜ்

© TamilOnline.com