'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2007 நவம்பர் 22ம் தேதி முதல் 26ம் தேதிவரை, ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வருகை தந்திருந்தார். அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மா உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் சொற்பொழிவுகளில் இருந்து...

'ஒருவன் நம்மிடம் கோபப்படும் போது நாமும் திருப்பிக் கோபப்பட்டால், அவனை தண்டித்தால், அது அவனது கையிலுள்ள புண்ணுக்கு மருந்து போட்டு ஆற்றுவதற்கு பதில், அதைக் குத்தி மேலும் பெரிதாக்குவது போன்றது. அதன் பலனாக காயத்திலிருக்கும் சீழ் நம்மீதும் படுகிறது. நம் உடலிலும் துர்நாற்றம் பரவுகிறது. நமது கோபத்தால் அவன் மேலும் அகங்காரம் கொண்டவனாக மாறுகிறான். நாமோ அஞ்ஞானியாகின்றோம். மாறாக, நாம் பொறுமையாக இருந்தோமா னால், அது கையிலுள்ள காயத்திற்கு மருந்து வைத்து ஆற்றுவதற்கு சமமாகும். அது நம்மைப் பரந்த மனப்பான்மை உடையவர்களாக மாற்றுகிறது. இது கடைபிடிக்கக் கடினமாகத் தோன்றலாம். முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.'

'இரயிலில் ஏறியபிறகும் சுமையைக் கையிலேயே பிடித்துக்கொண்டு, 'பாரம் அதிகமாக இருக்கிறது' என்று சொல்லி அழ வேண்டிய அவசியமில்லை. அதைக் கீழே வைக்கலாம். அதுபோல் இறைவனைப் பூரணமாக சரணாகதி அடைந்து அந்த மெய்ப்பொருளை நோக்கி முன்னேற முயற்சி செய்யுங்கள்.'

மேலும் விபரங்களுக்கு:
www.amma.org

Amma photo copyrighted to M.A. Center, 2005

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com