மனவளக்கலை பயிற்சி
'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்ற மந்திரம் மனவளக்கலைப் பயிற்சி மூலம் வட அமெரிக்கா முழுவதும் ஒலிக்கிறது.

நவம்பர் மாத சனி, ஞாயிறுகளில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்த மனவளக்கலை மூலம் எளிமையான முறையில் உடல் நலம், மன அமைதி, மன உறுதி ஆகியவற்றைப் பெருக்க உதவிடும் உடற்பயிற்சி, தியானம், காயகல்பப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள் பல இடங்களில் வழங்கப்படுகின்றன.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் 'தனிமனித வாழ்க்கை முறைக்கு ஏற்பத் துன்பம் வருகிறது. வாழ்க்கை சிக்கல்களுக்குக் காரணம் மனிதனே தான். இன்பம், துன்பம் என்பவை bio-magnetism என்பதன் செலவுதான். இதை முறையாக அளவு, தன்மை தெரிந்து பயன்படுத்தினால் என்றும் வாழ்வில் இனிமையே இருக்கும்' என்கிறார்.

'ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. ஆசைகளைத் துறப்பதல்ல. முறையான ஆசைகளோடு வாழ்வதும், அதை வாழ்க்கை நலன்களாக மாற்றிக் கொள்வதும் ஆன்மீகம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

மனவளக்கலை சமுதாயத்தை வலிமையாக்கக் கூடிய, மதத்துக்கு அப்பாற்பட்ட, ஆண், பெண், சிறுவர், பெரியவர் அனைவரும் பழகக்கூடிய பொதுவான பயிற்சி. வாழ்க்கையில் மலிந்திருக்கும் கோபம், கவலை, வஞ்சம், பேராசை ஆகியவற்றின் தோற்றுவாயை அறிந்து, முழுவதுமாகச் சரிசெய்து கொள்ள எளிமையான வழிமுறைகள் மனவளக்கலைப் பயிற்சியில் கிடைக்கின்றன.

பதினைந்துக்கும் மேற்பட்ட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இப்பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள மூன்று பேராசிரியர்கள் இப்பயிற்சிகளை நடத்துகிறார்கள். அவரவர் எண்ணங்களே அவரவரது வாழ்க்கையைச் செதுக்குகின்றன. மனதைத் தூய்மையாக்கி வளப்படுத்தி வாழ்வோம் வாருங்கள். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

தொடர்பு கொள்ள: Balachandran/Jayanthi - 201.355.7757
மின்னஞ்சல்: delhi.wcsc@vethathiri.org.
இணையதளங்கள்: www.vethathiri.in, www.vethathiri.org

© TamilOnline.com