டாக்டர் மால்கம் ஆதிசேஷையா
ஆய்வு மையங்கள் பற்றிய உலகப்படம் ஒன்றிருந்தால் அதில் சென்னை பெருமையுடன் இடம் பிடிக்கும். இதனைச் சாத்தியமாக்கிய நிறுவனங்களில் ஒன்று M.I.D.S. என அழைக்கப்பம் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம். இது 1971-இல் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

1910 ஏப்ரல் 18-இல் வேலூர் ஊரில் கல்லூரி முதல்வர் பால் ஆதிசேஷையாவின் மகனாகப் பிறந்த இவர் தமிழ்நாடு பெற்ற தவப்புதல்வர்.

London School of Economics - இல் டாக்டர் பட்டம் பெற்று கல்லூரி விரிவுரையாளராகத் (St. Pauls College, Calcutta, Madras Christian College) தொழில் தொடங்கினார். முதல் முதலாக உபதேசம் செய்யும் வகுப்பறைப் போதனைக்கு மாற்றாகக் கருத்தரங்க (seminar) முறையையும், கிராமப்புற சேவைச் சங்கம் என்ற நேரடி மக்கள் தொடர்பு ஆய்வுப் பழக்கத்தையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1946-இல் யுனேஸ்கோவில் உதவி இயக்குனராகத் தனது பணியைத் தொடங்கி உலகளாவிய ரீதியில் 22 ஆண்டு காலம 48,000 பக்கங்கள் கொண்ட 118 கோப்புகளில் யுனேஸ்கோ பதிவு செய்திருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் கல்வி, அறிவியல் வளர்ச்சிப் பணிக்கு ஏராளமான திட்டங்கள் வகுத்தவர். N.C.E.R.T. திரைப்படத்துறை, தொலைக்காட்சியில் கல்வி ஒளிபரப்பு, Aeronatical Engineering படிப்பு இந்தியத் தொழிற் கல்விக் கூடங்களுக்கும் (I.I.T.) அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஆய்வுச் சாதனங்கள் எல்லாம் இவரது முயற்சியால் கிடைத்தவை.

இவரை நினைத்தால் 'அறிவியல் மனித மூறையின் கவிதை என்றால், கலை இலக்கியம் மனித ஆன்மாவின் கதை' என்ற கார்க்கியின் வாசகம் நினைவுக்கு வரும்.

தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களைப் புணருத்தாரணம் செய்தவர். அஜந்தா ஓவியம் பற்றிய யுனெஸ்கோ புகைப்படத் தொகுப்பு. திருக்குறளைப் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், அராபிய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தது போன்றவை இவருடைய முக்கியமான பணிகள். 'யுனேஸ்கோ கூரியர்' பத்திரிகையைத் தமிழில் வெளிவரச் செய்தார். 1969 -இல் பாரிசில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குத் தலைமையேற்று தமிழ் - பிரெஞ்ச் ஆங்கில மொழிகளில் உரையாற்றினார். யுனெஸ்கோ உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாகவும் தனது ஆதரவை வழங்கினார்.

செப்டம்பர் 1970-இல் தனது 60-ஆவது வயதில் சென்னை திரும்பும் முன் தன் மனைவி திருமதி. எலிசபெத்துடன் இணைந்து ஒரு அறக்கட்டளையைத் தங்களது வீட்டில் (அடையாரில் உள்ளது) ஆரம்பித்தனர்.

சென்னை ஆய்வு வளர்ச்சி நிறுவனம், பொருளாதார முன்னேற்றம் குறித்து உதவுவதற்காக முனைவர் பட்டத்துக்குத் தயாரித்தல், வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகளும் ஆய்வுகளுமூ, ஆய்வுப் பிரச்சினைகள் பற்றிய ஆவணங்களைத் தொகுத்தல், நூல்கள் அமைத்தல், மாநில, தேசிய, சர்வதேச அளவில் வளர்ச்சி குறித்த ஆய்வுத் தகவல் பரிமாற்றம் ஆய்வு முடிவுகளைப் பிரசாரம் செய்தல் - என்ற பரவலான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1977-இல் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தால் (CSIR) அங்கீகரிக்கப்பட்டு தேசிய ஆராய்ச்சி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.

இந்நிறுவனம் 'புல்லட்டின்' என்ற மாதாந்திர ஆய்வு இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வெள்ளி விழா கொண்டாடி முடித்து விட்ட இந்நிறுவனத்தின் சாதனைகள் எண்ணி மாளாதது.

இந்திய நிலைப் பற்றி இவரது சுருக்கமான ஆணித்தரமான கணிப்புக்கள்/கவலைகள்.

கட்டுக்கடங்காத பணவீக்கம்

மலை போல் உயரும் வேலையில்லா திண்டாட்டம்.

(கருப்புப் பணத்தன்) இணையான பொருளாதாரம்

தேக்கமான முதலீடு

தேய்ந்து வரும் சேமிப்பு

ஏற்றத் தாழ்வான (செல்வாதாரப்) பங்கீடு

பெருமளவிலான வறுமை

தனிநபர் மற்றும் நிறுவன ஊழல்

பெருகி வரும் மக்கள் தொகை

சிதையும் சமூகம்

எனப் பரவலான சிந்தனை அக்கறைகளை வெளிப்படுத்தினார்.

இவையெல்லாம் அறிவாளியின் கவலையாக இருக்கும் வேளையில், அரசியல்வாதிகளின் முதலீடாவது தான் கொடுமையிலும் கொடுமை. ''இயற்கை நமக்கு எல்லா வளங்களையு வாரி வழங்கி வருகிறது. நமது பேராசைக்கு மட்டும் தான் அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை'' என்ற டாக்டர் மால்கம் ஆதிசேஷையாவின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன.

புதுவை ஞானம்

© TamilOnline.com