கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 11, 2007 அன்று 'சுநர்த்தகா' நடனப் பள்ளியின் நிறுவனர் கெளசல்யா ஸ்ரீநிவாசன் அவர்களின் மாணவி கவிதா விஜயசேகரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனக்டிகட் மாகாணம் விண்ட்சர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் கவிதாவின் தாயார் ஜெய் விஜயசேகர் வரவேற்றார்.

நிகழ்ச்சி கம்பீர நாட்டையில் அமைந்த பஞ்சமூர்த்தி அஞ்சலியுடன் தொடங்கியது. அடுத்து வந்தவை 'ஆனந்த நர்த்தன கணபதிம் பாவயே' (நாட்டை), 'திருப்பரங் குன்ற வேலா' (ஹிந்தோளம்), 'லக்ஷ்மி ரா வே ம இண்டிகெ' என்ற தெலுங்கு கீர்த்தனை ஆகியவற்றுக்கான கவிதாவின் தேர்ந்த நடனம். 'தேவர் முனிவர் தொழும்' (ஷண்முகப்ரியா) என்ற வர்ணத்தில் வந்த ஜதிகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆடிய பாதங்களிலும், பாவங்களிலும் கவிதாவின் கடின உழைப்பைக் காண முடிந்தது. 10ஆம் வகுப்பில் படிக்கும் கவிதா சிறு வயது முதலே நடனம் பயின்று வருகிறார். இவருடைய முதல் குரு மறைந்த 'நாட்டியப் பேரொளி' பத்மினி அவர்கள். கவிதா பரதநாட்டியம் தவிர, குச்சுப்புடி நடனமும், வாய்ப்பாட்டும் பயின்றவர்.

அடுத்து வந்த 'மாசில் அயோத்தில்' (ராகமாலிகை) என்ற இராமாயணத்தில் முக்கிய கட்டங்களை விவரிக்கும் பாடலில் கவிதாவின் அபிநயம் அற்புதம். ராமனாக, சீதையாக, கைகேயியாக, கூனியாக, அனுமனாக எனப் பல்வேறு பாத்திரங் களையும் நம் கண்முன்னே நிறுத்தியதில் மெய்சிலிர்த்தது. பதம், தில்லானா, மங்களத்துடன் நடன நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

கெளசல்யா ஸ்ரீநிவாசன் நட்டுவாங்கம் செய்தார். G. ஸ்ரீகாந்த் (வாய்ப்பாட்டு), பூமா நம்பிராஜன் (வாய்ப்பாட்டு), பி. இரவிசங்கர் (மிருதங்கம்), வி.கே. இராமன் (புல்லாங்குழல்), மைசூர் ஸ்ரீகாந்த் (வயலின்) ஆகியோரின் ஒத்துழைப்பு வெகு சிறப்பு. கலாரசிகர், பாடகர் ராஜம் குமார் அவர்கள் கவிதாவை வாழ்த்திக் கவிதை வழங்கினார்.

© TamilOnline.com